Friday, March 18, 2011

11. இக்காலத்தில் நாம் உயிர்மீட்சி அடைவது எப்ப‌டி?



உயிர்மீட்சி எப்பொழுது வரும்? இக்காலச் சபைகள் பரிதாபமான நிலையில் இருக்கின்றன. ஆக உயிர்மீட்சி தேவையே. அது எப்பொழுது வரும் என்றால்; கடவுளின் ஜனங்கள் ஏற்ற முயற்சி செய்வார்களாகில் உயிர்மீட்சி வரும். உயிர்மீட்சியைக் குறித்து இரண்டு விதமான அபிப்பிராயங்களிருக்கின்றன. ஒரு சாரார் உயிர்மீட்சியை உண்டாக்குவது கடவுள், நமது முயற்சிகளால் ஆவதொன்றுமில்லை; ஜெபிக்கவேண்டியதே நமது கடமை கடவுள் தாம் விரும்புகிறபடி செய்வார்; அவரைத் தடுக்கவும், துரிதப்படுத்தவும் மனிதரால் கூடாது எனக் கூறுகிறார்கள், அடுத்த சாராரோ, உயிர்மீட்சிக்காக மனிதன் செய்யவேண்டிய முயற்சிகள் திரள். அவனே அதற்கு உத்திரவாதி என்கிறார்கள்.

இதை ஒரு திருஷ்டாந்தத்தால் பார்க்கலாம். இரண்டு உழவர் இருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். ஒருவன் தன் வயலை நோக்கியப்படியே, தனக்குள் சொல்லுகிறதாவது: "எனக்கு இந்த வருடத்தில் நல்ல விளைச்சல் வேண்டும் என்றாலும் அது என் காரியமல்ல" என்று நினைத்து தன் வீட்டுக்குப்போய் உட்கார்ந்து ஜெபிக்கிறான் அடுத்த உழவனோ,  "எனக்கு இவ்வருடத்தில் நல்ல அறுவடை வேண்டும். ஆக நான் செய்யவேண்டிய கடமைகள் ஏராளம்" என்று தனக்குள் சொல்லிக்கொண்டு, வயலை உழுகிறான். பரம்படிக்கிறான், பயிரை நடுகிறான். தான் செய்ய வேண்டிய கடமைகள் எல்லாவற்றையும் செயதபின் கடவுள் ஏற்ற வெயிலையும்மழையையும் கொடுப்பாரென்று அவரையே நோக்கி, அறுவடைக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கிறான். இந்த‌ இர‌ண்டு உழ‌வ‌ர்க‌ளில் யாரை நீ விரும்புவாய்? நான்  இர‌ண்டாவ‌து ம‌னுஷ‌னையே விரும்புவேன். இவ‌னுக்கே நிதான‌ புத்தியிருக்கிர‌து.

இவ்வாறே உயிர்மீட்சியும் இருக்கிற‌து. க‌ட‌வுள் உயிர்மீட்சியை அனுப்புகிறார். ஆனால் அது வ‌ருமுன் நீயும், நானும் செய்ய‌ வேண்டிய‌ க‌ட‌மைக‌ள் ஏராள‌ம் இருக்கின்ற‌ன‌. என்னுடைய‌ திட ந‌ம்பிக்கையும், சொந்த‌ அனுப‌வ‌மும் யாதெனில், எந்த‌ச் ச‌பையும் ஜ‌ன‌மும் த‌குந்த ஆய‌த்த‌முள்ள‌தாயிருந்தால் உயிர்மீட்சி எந்நேர‌த்திலும் உண்டாகும். ச‌ரித்திர‌மும்
அவ்வாறே கூறுகிற‌து.

சார்ல‌ஸ் பின்னி என்ப‌வ‌ரும் இவ்வாறே சாட்சி ப‌க‌ருகிறார். உண‌ர்வ‌ற்று  நிர்விசார‌ம் நிறைந்த‌ ச‌பைக‌ளிட‌ம் அடிக்க‌டி அவ‌ர் சென்று உயிர்மீட்சி  பெறும்ப‌டியான‌ நிப‌ந்த‌னைக‌ளைக் கைக்கொள்ளும்ப‌டி ஏவுவார். அவ‌ர்க‌ள் அவ்வாறே  செய்ய‌வே, அவ‌ர்க‌ளிட‌ம் ப‌ல‌த்த‌ உயிர்மீட்சி உண்டான‌து. ஆவிக்குரிய‌  தாழ்ச்சியுள்ள‌ இட‌ங்க‌ளில் உயிர்மீட்சி எச்ச‌ம‌ய‌த்திலும் உண்டாகும்.  தேவை அதிக‌மாயிருக்கும் வ‌னாந்த‌ர‌மும், வ‌ர‌ண்ட‌துமான் இட‌ங்க‌ளில் க‌ட‌வுள் ம‌ழையைப் பெய்ய‌ச் செய்கிறார். 

இங்கிலாந்தில் ஜாண் வெஸ்லி என்ப‌வ‌ர் வேலை செய்த‌ கால‌ம் மிக‌வும் இருளான‌து. அக்கால‌த்திலேயே ஆண்ட‌வ‌ர் உயிர்மீட்சி உண்டாகும்ப‌டி  செய்தார். அவ்வாறே அய‌ர்லாந்தில் 1859 ‍ஆம் வ‌ருட‌த்திலும் வேல்ஸில் 1904 ஆண்டிலும் உயிர்மீட்சி உண்டாயிற்று. சார்ல‌ஸ் பின்னியின் கால‌த்திலேயே, மேற்க‌ண்ட‌ப‌டி அமெரிக்க‌ ஐக்கிய‌ மாகாண‌த்தில் உயிர்மீட்சி ஆர‌ம்பித்த‌து. இக்கால‌த்திலும்  அப்ப‌டியே ந‌ட‌க்கும். அதை நாடித் தேவ‌ வேண்டிய‌து ந‌ம‌து க‌ட‌மை.

உயிர்மீட்சி ந‌ம்மைச் சார்ந்த‌தென்றால், நாம் நிறைவேற்ற‌வேண்டிய‌ நிப‌ந்த‌னைக‌ள்,
முய‌ற்சிக‌ள் எவை?

1.
பாவ‌ அறிக்கையும், ந‌ஷ்ட‌ஈடு செலுத்த‌லும்

நாம் தேவ‌னோடு ச‌ரியாயிருந்தால் உயிர்மீட்சி உண்டாகும். நாம் எப்படிச் ச‌ரியாக‌லாம்? பாவ‌ அறிக்கையும், ந‌ஷ்ட‌ஈடு செலுத்த‌லும் வேண்டும். "என்  இருத‌ய‌த்தில் அக்கிர‌ம‌ சிந்தை கொண்டிருந்தேனானால் ஆண்ட‌வ‌ர் என‌க்குச் செவிகொடார்" (ச‌ங் 66:18). என் இருத‌ய‌த்தில் நான் பாவ‌த்தை ஒளித்து வைத்திருந்தால்  க‌ட‌வுள் நான் சொல்லுகிற‌தைக் கேட்க‌மாட்டார். என் உள்ள‌த்திலிருக்கும் பாவ‌த்தை ஒருவ‌ரும் அறியாதிருக்க‌லாம். ஆனால் தேவ‌ன் அதைப் பார்க்கிறார். நான் அதை அறிக்கை  செய்து, அதை என் உள்ல‌த்திலிருந்து நீக்காவிடில், க‌ட‌வுள் என் ஜெப‌த்தைக் கேட்க‌மாட்டார். "இதோ இர‌ட்சிக்க‌க்கூடாத‌ப‌டிக்குக் க‌ர்த்த‌ருடைய‌ கை குறுகிப்  போக‌வுமில்லை. கேட்க‌க் கூடாத‌ப‌டிக்கு அவ‌ருடைய‌ செவி ம‌ந்த‌மாக‌வுமில்லை. உங்க‌ள்  அக்கிர‌ம‌ங்க‌ளே உங்க‌ளுக்கும், உங்க‌ள் தேவ‌னுக்கும் ந‌டுவாக‌ப் பிரிவினை  உண்டாக்குகிற‌து; உங்க‌ள் பாவ‌ங்க‌ளே அவ‌ர் உங்க‌ளுக்குச் செவி கொடாத‌ப‌டிக்கு
அவ‌ருடைய‌ முக‌த்தை உங்க‌ளுக்கு ம‌றைக்கிற‌து" (ஏசாயா 9:1,2). குற்ற‌ம்  க‌ட‌வுளுடைய‌த‌ல்ல‌; அது என்னுடைய‌து. க‌ட‌வுளின் கை எவ்வ‌ளவோ நீள‌மாயிருக்கிற‌து. தூர‌மாய்ப் போன‌ ஆண்க‌ள் பெண்க‌ள் அனைவ‌ரையும் அது  எட்டிப் பிடித்து  இர‌ட்சிக்க‌க்கூடும். ஒரு ம‌னித‌ன் ஆற்று வெள்ள‌த்தில் விழுந்து, இழுக்க‌ப்ப‌ட்டுப்  போகிறான் என‌ வைத்துக் கொள்ளுங்க‌ள், ப‌ல‌ர் அவ‌னை மீட்க‌த் த‌ங்க‌ள் கைக‌ளை நீட்டி  முய‌ற்சித்த‌போதிலும் முடியாது போயிற்று, கார‌ண‌ம் அவ‌ர்க‌ள் க‌ர‌ங்க‌ள்  குறுகிய‌வைக‌ள். ஆனால் க‌ட‌வுளின் க‌ர‌ங்க‌ளோ த‌ண்ணீருக்குள் ஆழ்ந்த‌ ம‌னித‌னையும் எட்டிப் பிடித்து மீட்க‌த்த‌க்க‌தாக‌ அத்த‌னை நீண்ட‌தாயிருக்கின்ற‌ன‌.

அப்ப‌டியானால், குறைவு யாரிட‌மிருக்கிற‌து? "உங்க‌ளுடைய‌ பாவ‌ங்க‌ளே" க‌ட‌வுள்  உங்க‌ளை இர‌ட்சித்து விடுவிக்க‌க்கூடாத‌ப‌டிக்குத் த‌டையாயிருக்கின்ற‌ன‌. பாவ‌மே
மேக‌ம் போன்று க‌ட‌வுளின் முக‌த்தை ம‌றைக்கிற‌து; உங்க‌ளையும் வேறாக‌ப்  பிரிக்கிற‌து.

என் சிநேகித‌னே, நீ ஒரு கிறிஸ்த‌வ‌னாயிருந்தால் எப்ப‌டியும், உன்னை நெருங்கி  நிற்கிற‌ ஏதோ ஒரு பாவ‌ம் இருக்க‌லாம். நீ அநேக‌ பாவ‌ங்க‌ளிலிருந்து  விடுவிக்க‌ப்ப‌ட்டிருக்க‌லாம். ஆனாலும் ஒரு பாவ‌ம் உன்னை இன்னும் அடிமைப் ப‌டுத்தியிருக்கிற‌து. நீ எங்கு சென்றாலும் அங்கெல்லாம் அப்பாவ‌ம் உன்னைத்
தொட‌ர்ந்து பிடிக்கிற‌து. ஒருவேளை அப்பாவ‌ம் ஒரு கெட்ட‌ ப‌ழ‌க்க‌மாயிருக்க‌லாம். அது பாவ‌ம‌ல்ல‌ என‌ நீ நினைக்க‌லாம். ஆனாலும் அதுவே க‌ட‌வுளுக்கும் உன‌க்கும் ஊடே நின்று உன்னை வேறாக‌ப் பிரிக்க‌லாம். மேலும் ஒரு பாவ‌த்தைத‌ திரும்ப‌த் திரும்ப‌ நீ செய்து, அத‌ற்காக‌ ம‌ன்னிப்புக் கேட்க‌லாம். நீ ப‌ல‌வீன‌னாயிருக்கும் ஒரு நொடிப்பொழுதில் உன்னைச் சுற்றியிருக்கும் பாவ‌த்திற்கு நீ முழுவ‌துமாய் ச‌ர‌ண‌டைகிறாய். அது உன்னைப் ப‌ற்றிப் பிடிக்கிற‌து. அதை மேற்கொண்டு உன்னால் வெளியே வ‌ர‌ முடியாது. நீ விரும்பினாலும், அதை விட்டு விட‌ உன‌க்கு முடிய‌வில்லை. அப்பாவ‌மே க‌ட‌வுளை விட்டு உன்னைத் தூர‌மாக்குகிற‌து. நீ அப்பாவ‌த்தை அறிக்கை  செய்து முற்றிலும் விட்டுவிடாவில் நீ தேவ‌னோடு ஐக்கிய‌மாயிருக்க‌ முடியாது.
த‌ப்பித‌ம் என்று அறிந்த எல்லாவ‌ற்றையும் விட்டு நீ வில‌கியிருக்கிறாயா? அல்ல‌து  பாவ‌ம் என்று அறிந்தும், அப்பாவ‌ம் உன் ஜீவிய‌த்தில் நிலைத்திருக்க‌ இட‌ம்  கொடுக்கிறாயா?

அறிக்கை ம‌ட்டும் போதாது, ச‌ரிப்ப‌டுத்த‌வேண்டும்.
த‌ப்பித‌ங்க‌ளை ச‌ரியாக்க‌ப்ப‌ட‌வும் வேண்டும். ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ம‌ன‌முடையும்ப‌டி நீ  ஏதாவ‌து பேசியிருந்தால், செய்திருந்தால் அவ‌ர்க‌ளிட‌ம் நீ ம‌ன்னிப்புக்  கேட்க‌வேண்டும். ம‌னித‌ரோடு ஐக்கிய‌மாகுத‌லே க‌ட‌வுளோடு ஐக்கிய‌ப்ப‌டுத‌லாகும்.
ம‌னித‌ருக்கு விரோத‌மாய்ச் செய்யும் குற்ற‌ம் க‌ட‌வுளுக்கும் விரோத‌மான‌து. நீ உன் ச‌கோத‌ர‌னுக்கு விரோத‌மாக‌க் குற்ற‌ம் செய்துகொண்டு க‌ட‌வுளுட‌ன் ஐக்கிய‌மாய்  ஜீவிக்க‌முடியாது. குற்ற‌ம‌ற்ற‌ ம‌ன‌ச்சாட்சி உன‌க்கு வேண்டும். ஒருவேளை நீ
திருப்பிக் கொடாத‌ க‌ட‌ன் இன்னும் இருக்க‌லாம். நீ க‌ட‌வுளுக்கு முன் உன்னைத் தாழ்த்தி, ப‌ரிசுத்தாவியான‌வ‌ர் உன்னைச் சோதித்த‌றியும்ப‌டி க‌ட‌வுளை நோக்கிப் பிரார்த்திப்பாயாகில், அவ‌ர் எல்லாவ‌ற்றையும் உன‌க்கு வெளிப்ப‌டுத்துவார். நீ
ச‌ரிப்ப‌டுத்த‌வேண்டிய‌ குற்ற‌ங்க‌ளை அவ‌ர் உன‌க்குக்காட்டுவார். விட்டுவிட‌ வேண்டிய‌ பாவ‌ங்க‌ளையும் உன‌க்கு வெளிப்ப‌டுத்துவார். பாவ‌ அறிக்கை, பாவ‌த்தை
வெறுத்து வில‌க்குத‌ல், ந‌ஷ்ட‌ஈடு செலுத்துத‌ல் இவைக‌ளினாலேய‌ன்றி  வேறெவ்வித‌த்தினாலும் நாம் தேவ‌னோடு ஐக்கிய‌மாய் ஜீவிக்க‌ முடியாது. பாவ‌ம் ஒன்றே  ந‌ம‌க்கும் க‌ட‌வுளுக்கும் ந‌டுவிலுள்ள பெரிய‌ த‌டை. எவ்வித‌த்திலும் இந்த‌த் த‌டை நீக்க‌ப்ப‌ட‌வேண்டும்.

டொரான்டோவிலுள்ள‌ டோரி அலெக்சாந்த‌ர் கூட்ட‌த்தில் 1905ஆம் வ‌ருட‌த்தில் நான்  குண‌ப்ப‌ட்ட‌போது தெருக்க‌ளிலும், க‌டை வீதிக‌ளிலும், மோட்டார் கார்க‌ளிலும் எங்கு  பார்த்தாலும் ஓர் அங்குல‌ அக‌ல‌மும், ஆறு அங்குல‌ நீள‌முமுள்ள‌ ஆயிர‌க்க‌ண‌க்காக‌
சிறு வெள்ளை அட்டைக‌ளை நான் க‌ண்டேன். அவ்வ‌ட்டைக‌ளின் இருப்ப‌க்க‌ங்க‌ளிலும் சிவ‌ப்பு எழுத்தில் "தேவ‌னோடு ந‌ல்ம‌ன‌ பொருந்தி ஒப்புர‌வாகு" என‌  எழுத‌ப்ப‌ட்டிருந்த‌து. அந்த‌ அட்டை எப்ப‌க்க‌த்தில் இருந்தாலும், செயதி மாறாதிருந்த‌து. அவ்வாச‌க‌த்தை வாசித்த‌தின் ப‌ல‌னாக‌ ஆயிர‌க்க‌ண‌க்காக‌ ம‌க்க‌ள் த‌ங்க‌ள் குற்ற‌த்தை உண‌ர்ந்த‌ன‌ர்.

இதைப்போன்ற‌ பாவ‌ உண‌ர்ச்சியே உயிர்மீட்சிக்கும் அவ‌சிய‌ம். தேவ‌னுடைய‌ ஜ‌ன‌ங்க‌ள் த‌ங்க‌ள் பாதையில் இருக்கும் க‌ல்க‌ளைப் போன்ற‌ பாவ‌ங்க‌ளை எடுத்து  அப்புற‌ப்ப‌டுத்த‌வேண்டும். அப்போது தேவாவியான‌வ‌ர் த‌டையின்றி  ந‌ம்மேல் ஊற்ற‌ப்ப‌டுவார்.

2.
வியாகுல‌த்தோடு கூடிய‌ ஜெப‌ம்

வேத‌னையுட‌ன் நாம் ஜெப‌ம் ப‌ண்ண‌ அறியும்போது உயிர்மீட்சி உண்டாகும். "சியோனோவெனில்  ஒருமிக்க‌ வேத‌னைப்ப‌ட்டும், த‌ன் குமார‌ரைப் பெற்றும் இருக்கிற‌து" (ஏசாயா 66:8). ஒரு குழ‌ந்தை வேத‌னையில்லாம‌ல் பிற‌க்க‌ முடியுமா? முடியாதே. ஒவ்வொரு புது ஜீவ‌னும்  இவ்வுல‌கில் உற்ப‌த்தியாகும்போது வேத‌னையும், பாடும் கூட‌வே சேர்ந்து வ‌ர‌வேண்டும்
என்ப‌து க‌ட‌வுளின் ஒழுங்கு. வேத‌னைக்குத் த‌ப்பித்துக்கொள்ள‌ முடியாது.
இதைப்போன்றே, தேவ‌னுடைய‌ குடும்ப‌த்தில் பிள்ளைக‌ள் பிற‌க்கும் ஒழுங்கும்
இருக்கிற‌து. சில‌ர் ம‌ன‌வேத‌னைய‌டைய‌ வேண்டும். இக்கால‌த்தில் ம‌ன‌நேர்வு
அடைகிற‌வ‌ர்க‌ள் சொற்ப‌ப் பேராய் இருப்ப‌தினாலேயே சில‌ர் மாத்திர‌ம்
இர‌ட்சிக்க‌ப்ப‌டுகிறார்க‌ள். என் ந‌ண்ப‌னே, நாம் இர‌வு முழுவ‌தும் அல்ல‌து பாதி
இர‌வாவ‌து தூக்க‌மின்றி, ம‌ன‌வேத‌னையுட‌ன் ஜெப‌த்தில் த‌ரித்திருந்தால் ம‌ட்டும்,
ஆத்துமாக்க‌ள் தேவ‌னுடைய‌ இராஜ்ய‌த்தில் பிற‌க்க‌க்கூடும். உயிர்மீட்சியும்
உண்டாகும்.

அநேக‌ சுவிசேஷ‌க‌ர் த‌ங்க‌ளுட‌ன் ந‌ன்றாய்ப் பாட‌க்கூடிய‌வ‌ர்க‌ளைக் கூட்டிப்போவ‌து  வ‌ழ‌க்க‌ம். ஆனால் பின்னி என்ப‌வ‌ர் ஜெபிக்கிற‌ ஒருவ‌ரைக் கூட்டிக்கொண்டுபோவ‌து  வ‌ழ‌க்க‌ம். அவ‌ர் பெய‌ர் நாஷ். பின்னி பிர‌ச‌ங்க‌ம் செய்கையில் இந்த‌ ஜெப‌வீர‌ன்,  த‌னிமையாய் ஒரு காட்டிற்குப்போய், த‌ம் உள்ள‌ங்கைக‌ளால் முக‌த்தை மூடி, பின்னியை அநேக‌ரின் ஆத்தும‌ இர‌ட்சிப்புக்காக‌ ஆண்ட‌வ‌ர் உப‌யோகிக்கும்ப‌டி ஆத்தும‌ வேத‌னையோடு ஜெபிப்பார். பின்னியும் வேத‌னையுட‌ன் ஜெபிப்பது உண்டு. வில்லிய‌ம்
பிரேம்வெல் என்ப‌வ‌ர் ஆத்தும‌ ஆதாய‌த்திற்காக‌ ஒரு குழியிலிருந்து சாப்பாடு
இல்லாம‌ல் 36 ம‌ணி நேர‌ம் ஜெபித்தார். அநேக‌ நூற்றாண்டுக‌ளாக‌ தேவ‌ ஊழிய‌ர்க‌ள் வேத‌னையோடு ஜெபித்திருக்கிறார்க‌ள். உயிர்மீட்சி உண்டாக‌ வேண்டுமானால் நாம் செய்ய‌  வேண்டிய‌ பிர‌ய‌த்த‌ன‌ங்க‌ளில் பாதி ஜெப‌மே.

3.
கிறிஸ்துவுக்காக‌ நாம் தைரிய‌மாய்ச் சாட்சி ப‌க‌ர்ந்தால் உயிர்மீட்சி உண்டாகும்.

தேவ‌ வ‌ச‌ன‌த்தையே நாம் பிர‌ச‌ங்கிக்க‌ வேண்டும். ந‌ம‌து வார்த்தைக‌ளே பாவ‌
உண‌ர்ச்சியையும், குண‌ப்ப‌டுத‌லையும் உண்டாக்கும்.

க‌ர்த்த‌ருடைய‌ வார்த்தைக‌ள் ச‌ம்ம‌ட்டியைப்போல் இருக்கின்ற‌ன‌. க‌ல்லான‌
இருத‌ய‌த்தையும் அவைக‌ள் உடைக்கின்ற‌ன‌. ப‌ட்ட‌ய‌ம்போன்று அவைக‌ள் இருத‌ய‌த்தை  ஊடுருவ‌க் குத்துகின்ற‌ன‌. அக்கினியைப் போன்று அவைக‌ள் பாவ‌ம‌ற‌ இருத‌ய‌த்தை  எரித்து சுத்திகரிக்கின்ற‌ன‌. உயிர்மீட்சி உண்டாக‌ வேண்டுமானால் தேவ‌னுடைய‌  பிள்ளைக‌ள் தைரிய‌மாய்த் தேவ‌ வார்த்தைக‌ளைக் கூறி அறிவிக்க வேண்டும்.

தேவ‌னால் வ‌ல்ல‌மையாய் உப‌யோகிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள், உயிர்மீட்சி ந‌டைபெற்ற‌
கால‌த்திலும், சுவிசேஷ‌ப்பிர‌ப‌ல்ய‌த்திலும் ஐந்து பொருள்க‌ளின் பேரிலேயே
பிர‌ச‌ங்க‌ம் செய்த‌தாக‌ ச‌ரித்திர‌த்தின் மூல‌ம் நான் அறிந்தேன் இந்த‌ ஐந்து
பொருள்க‌ளும் திட்ட‌மான‌ பாவ‌ உண‌ர்வை ஜ‌ன‌ங்க‌ளுக்குள் உண்டாக்கின‌. அவை  எவைக‌ளெனில் பாவ‌ம், இர‌ட்சிப்பு, மோட்ச‌ம், ந‌ர‌க‌ம், நியாய‌த்தீர்ப்பு
என்ப‌வைக‌ளே. பாவ‌த்தின்மேல் பிர‌ச‌ங்க‌ங்க‌ள் செய்ய‌வேண்டும் திட்ட‌மான‌ பாவ‌  உண‌ர்ச்சி தோன்ற‌வேண்டுமானால், பாவ‌த்தைத் தெளிவாக‌க் காட்ட‌வேண்டும். வியாதியைக்  காட்டி அத‌ற்குரிய‌ ம‌ருந்தையும் கூற‌வேண்டும். மேலும், அவிசுவாச‌மாகிய‌  பாவ‌த்தையும், கிறிஸ்துவைப் புற‌க்க‌ணித்த‌லாகிய‌ பாவ‌த்தையும் காட்டுத‌ல் அதிக‌  அவ‌சிய‌மே. மனித‌ர் யாவ‌ரும் தேவ‌ பார்வையில் பாவிக‌ள் என்ப‌தைத் தெளிவாய்  வ‌ற்புறுத்த‌ வேண்டும்.

அடுத்தாற்போல் இர‌ட்சிப்பைக் குறித்துப் பேச‌ வேண்டும். இதுவே பாவ‌ நிவ‌ர்த்தி;  பாவ‌ப் பிணியைப்போக்கும் ஔஷ‌த‌ம். பின்பு, நித்திய‌த்தைப்ப‌ற்றியும் பேச‌ வேண்டும்.  நிச்ச‌ய‌மாக‌வே நித்திய‌ம் உண்டு. உல‌க‌ம் அநித்திய‌ம். ம‌றுமையிலே ஒவ்வொருவ‌ருக்கும் நித்திய‌ம் இருக்கிற‌து என்ப‌தை விள‌க்க‌வேண்டும். இவைக‌ள் ம‌ட்டும் போதாது. நியாய‌த்தீர்ப்பைப்ப‌ற்றியும் கூற‌ வேண்டும். ஒவ்வொரு ம‌னித‌னும் த‌ன்னைச் சிருஷ்டித்த‌ க‌ர்த்தாவுக்கு முன் நின்று க‌ண‌க்கு ஒப்புவிக்க‌ வேண்டும் என்ப‌தை அழுத்திக் காட்ட‌வேண்டும். "உன் தேவ‌னைச் ச‌ந்திக்க‌ ஆய‌த்த‌ப்ப‌டு" (ஆமோஸ் 4:12). இவ்வாக்கிய‌த்தையும் எடுத்துக்கூறுவ‌து ந‌ல்ல‌து.

இவ்வைந்து ச‌த்திய‌ங்க‌ளையும் ம‌க்க‌ளுக்குத் தெளிவாய் காட்டினால், பாவ‌
உண‌ர்ச்சியும், இர‌ட்சிப்பும் முடிவில் உயிர்மீட்சியும் நிச்ச‌ய‌மாய் உண்டாகும்.
அப்போஸ்த‌ல‌ர் இச்ச‌த்திய‌ங்க‌ளை உப‌தேசித்த‌ன‌ர். சென்ற‌ ப‌ல‌ நூற்றாண்டுக‌ளாக‌,  உயிர்மீட்சிக் கூட்ட‌ங்க‌ளிலும், சுவிசேஷ‌ப்பிர‌ப‌ல்ய‌க் கூட்ட‌ங்க‌ளிலும்  இச்ச‌த்திய‌ங்க‌ள் மீதே பிர‌ச‌ங்கங்க‌ள் செய்ய‌ப்ப‌ட்டு வ‌ந்திருக்கின்ற‌ன.

4.
பரிசுத்த‌ ஆவியான‌வ‌ரின் அபிஷேக‌ம்
ப‌ரிசுத்த‌ ஆவியான‌வ‌ரின் வ‌ர‌ங்க‌ளையும், அபிஷேக‌த்தையும் பெற்ற‌வ‌ர்க‌ளாய்
ஊழிய‌ம் செய்யும்போது உயிர்மீட்சி உண்டாகும். கிரியை ந‌ட‌ப்பிக்கிற‌வ‌ர் ப‌ரிசுத்த‌ ஆவியான‌வ‌ரே காரிய‌ க‌ர்த்தா அவ‌ரே. இது அவ‌ருடைய‌ கால‌ம். ம‌னித‌ரின்  இருத‌ய‌ங்க‌ளில் பாவ‌ உண‌ர்ச்சியையும், இர‌ட்சிக்கும் விசுவாச‌த்தையும்  உண்டாக்குகிற‌வ‌ர் அவ‌ரே. அவ‌ர் மூல‌மாக‌வே ஜ‌ன‌ங்க‌ள் ம‌று பிற‌ப்ப‌டைகிறார்க‌ள்.  தேவ‌னுடைய‌ வார்த்தைக‌ள் பிர‌ச‌ங்கிக்க‌ப்ப‌டும்போது ஆவியான‌வ‌ர் அதைச் செய்கிறார்.  ஆக‌வே நாம் அவ‌ர்மேல் சார்ந்திருக்க‌ வேண்டும். நாம் ஆவியின் நிறைவையும்  அபிஷேக‌த்தையும் பெற்ற‌வ‌ர்க‌ளாக‌ப் பிர‌ச‌ங்கிக்கிறோம் என்ற‌ நிச்ச‌ய‌ம் ந‌ம‌க்கு  வேண்டும்.

க‌ட‌ந்த‌ நூற்றாண்டுக‌ளில் தேவ‌ன் உப‌யோகித்த‌ ம‌னித‌ர்க‌ள் ஆவியான‌வ‌ரின்
அபிஷேக‌ம் பெற்ற‌வ‌ர்க‌ளே. அவ‌ர்க‌ள் தேவ‌ ச‌முக‌த்தில் காத்திருந்து அவ‌ர‌து
அபிஷேக‌ம் பெற்ற‌ பின்ன‌ரே, வெளியே சென்று ஜெபிப்போராக‌வும், ஜெய‌ம்
பெற்ற‌வ‌ர்க‌ளாக‌வும் இருந்த‌ன‌ர்.

பின்னி, ஜாண் வெஸ்லி, ஜியார்ஜ், உட்பீல்டு முத‌லான‌ பிர‌ச‌ங்கிமார்க‌ள் எல்லாரும்  ஆவியான‌வ‌ரின் அபிஷேக‌ம் பெற்ற‌வ‌ர்க‌ளாக‌ இருந்தார்க‌ள். வெஸ்லி, ம‌ற்ற‌வ‌ர்க‌ளோடு  காலை 3 ம‌ணிக்கு த‌ரித்திருக்கையில் அபிஷேக‌ம் பெற்ற‌தாக‌த் த‌ன் அனுப‌வ‌த்தைக்  கூறியிருக்கிறார். டீ.எல். மூடி அவ‌ர்க‌ளும் அபிஷேக‌ம் பெற்றிருந்தார். அவ‌ர்  பெற்றிருந்த‌ அபிஷேக‌ம் அப‌ரிமித‌மாயிருந்த‌ப‌டியால் க‌ட‌வுள் த‌ம‌து க‌ர‌த்தை
நிறுத்தும்ப‌டி கேட்டாராம். அபிஷேக‌ம் பெற்ற‌த‌ற்கு முன் அவ‌ருடைய‌
பிர‌ச‌ங்க‌த்தால் சில‌ரே குண‌ப்ப‌ட்டார்க‌ள். அபிஷேக‌ம் பெற்ற‌ பின்பு, அதே
பிர‌ச‌ங்க‌ங்க‌ளைத் திரும்ப‌வும் அவ‌ர் செய்யும்போது அநேக‌ ஆண்க‌ளும், பெண்க‌ளும்  குண‌ப்ப‌‌ட்ட‌தை அவ‌ர் க‌ண்டார். இவான் ராப‌ர்ட்ஸ் என்ப‌வ‌ரும் அபிஷேக‌ம் பெற்ற‌  ஒரு பிர‌ச‌ங்கியாய். அவ‌ர் தேவ‌னைச் ச‌ந்தித்து, ஆவியான‌வ‌ரின் அபிஷேக‌ம் பெற்று,  அப்பெல‌த்தால் வேல்ஸ் தேச‌ம் முழு வ‌தையும் ப‌ர‌ம‌ அக்கினியால் கொளுத்தி, எங்கும்  உயிர்மீட்சி உண்டாகும்ப‌டி செய்தார் முற்கால‌ மெத‌டிஸ்டு பிர‌ச‌ங்கிமார் எல்லாரும்  அபிஷேக‌ம் பெற்ற‌வ‌ர்க‌ளாயிருந்த‌ப‌டியால், அவ‌ர்க‌ள் அட்லாண்டிக் ச‌முத்திர‌த்தின்
இரு ப‌க்க‌ங்க‌ளிலுமுள்ள‌ தேச‌ங்க‌ளில், சுவிசேஷ‌ம் கூறி அறிவிக்கையில், அக்கினி  போன்று உயிர்மீட்சி எங்கும் ப‌ர‌வின‌து.

ஆவியான‌வ‌ரின் அபிஷேக‌த்தின் வ‌ல்ல‌மையை ஊழிய‌ர்க‌ள் உண‌ராதிருக்க‌லாம். ஆனால்  க‌ட‌வுள் வ‌ல்ல‌மையாய் உப‌யோகிக்கிற‌வ‌ர்க‌ள் மேல் ஓர் அற்புத‌ சக்தி  த‌ங்கியிருக்கிற‌து. எங்குமுள்ள‌வ‌ர்க‌ள் விய‌க்க‌த்த‌க்க‌ ப‌ல‌ன்க‌ள் உண்டாவ‌து  அந்த‌ வ‌ல்ல‌மையாலேயே. ஆவியின் அபிஷேக‌ம் பெற்ற‌வ‌ர்க‌ள், ஆவியான‌வ‌ரால் உடுத்த‌ப்ப‌ட்டிருக்கிறார்க‌ள். என் ச‌கோத‌ர‌ர்க‌ளே! இக்கால‌த்தில் ந‌ம‌க்கும்  இவ்வையான‌ ஆவியான‌வ‌ரின் அபிஷேக‌ம் தேவை. ந‌ம்மில் அநேக‌ர்  வ‌ல்ல‌மைய‌ற்ற‌வ‌ர்க‌ளாயிருக்கிறோம். ந‌ம‌து சொந்த‌ ஆவியினாலேயே வேலைக‌ள்  செய்ய‌ப்ப‌டுகின்ற‌ன‌. ந‌ம‌து ஊழிய‌ம் அற்ப‌மான‌தாக‌வும் இருக்கிற‌து. ஆக‌வே  ந‌ம‌க்கு வ‌ல்ல‌மையைக் கொடுக்க‌க்கூடிய‌ ப‌ரிசுத்தாவியான‌வ‌ரின் நிறைவை நாம் பெற்று
வ‌ல்ல‌மையான‌ ஊழிய‌ம் செய்வோமாக‌.

நாம் உயிர்மீட்சிக்காக‌க் க‌ஷ்ட‌ ந‌ஷ்ட‌ங்க‌ளைச் ச‌கிக்க‌ ஆய‌த்த‌மாயிருக்கிறோமா?
உயிர்மீட்சி வ‌ருவ‌த‌ற்காக‌ நீ செய்ய‌ வேண்டிய‌ க‌ட‌மைக‌ளைச் செய்வ‌தில்,
பாடுப‌டுத‌லை ஏற்று, அத‌ற்கென‌ உழைக்கிற‌வ‌ர்க‌ளில் நீயும் ஒருவ‌னாயிருப்பாயா?  க‌ட‌வுள‌து நோக்க‌ம் நிறைவேற்ற‌ப்ப‌ட‌ வேண்டும். உயிர்மீட்சிக்காக‌ப்  பிரார்த்திக்கிற‌வ‌ர்க‌ளோடு நாம் சேர்ந்து கொண்டு ஊக்க‌மாய் ஜெபிப்போமாக‌. பெரிய‌  அப்போஸ்த‌ல‌ன் கொடுத்த‌ கட்டளை‌க்குக் கீழ்ப்ப‌டிந்து, சுவிசேஷ‌க‌னுடைய‌ வேலைச் செய்து வ‌ருவோமாக‌.

10. உயிர் மீட்சியில் கடவுள் தமது வல்லமையை விளங்க‌ப்பண்ணுகிறார்




ஆதித் திருச்சபையின் காலஙள் உயிர்மீட்சியின் காலங்க‌ளே. இக்காலத்தின் பிரச்சினையைத்தீர்க்கும் வழி உயிர் மீட்சியேயொழிய வேறில்லை. உயிர்மீட்சியின்றி எந்தச் சபையும் நிலைத்திருப்பது சந்தேகம் கடவுள் தமது வல்லமையைப் பலமாய் வெளிப்படுத்தும்படி ஜெபிக்கிறவர்கள் உலக முழுவதும் இருக்கிறார்கள். அந்த ஜெபங்க‌ள் கேட்கப்படுமா? உயிர்மீட்சி உண்டாகுமா? அது ஏற்படுமானால் அது எதைப்போலிருக்கும்? அது உண்டாகும்படி நாம் செய்ய வேண்டியது என்ன? சங்கீதம் 85:6 இல் காணப்படும் ஜெபத்திற்கு நமது காலத்தில் பதில் அளிக்கப்படுமா? "உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ?" நமது கண்கள் தேவன் மேலேயே இருக்கின்றன. அவர் மட்டுமே தமது ஜனங்களை உயிர்ப்பிக்கக்கூடியவர். அவர் அப்படிச் செய்யும்போது சபை ஒரு தலைமுறையும் அறிந்திராத அப்படிப்பட்ட சந்தோஷம் உண்டாயிருக்கும்.

உயிர் மீட்சி நமக்கு எப்பொழுது அவசியம்:

நான் சில முக்கியமான கேள்விகலைக் கேட்டு அவைகளுக்கு உத்தரவு சொல்லுகிறேன்.
முதலாவது உயிர் மீட்சி நமக்கு எப்பொழுது அவசியம் என்றால்:

நாம் ஆதியில் கொண்ட அன்பை இழக்கும்போது நமக்கு உயிர் மீட்சி தேவை. என் சிநேகிதனே, நீர் இரட்சிக்கப்பட்ட சமயத்தில், ஆத்துமாக்கள் பேரில் உமக்கிருந்த அன்பையும், தேவ சமுக உணர்ச்சியையும் யோசித்துப் பாரும். ஜெபத்திலும், சாட்சி கூறுவதிலும், சுவிசேஷக் கீர்த்தனைகள் பாடுவதிலும் உனக்கிருந்த அன்பையும், ஆவலையும் ஞாபகத்திற்குக் கொண்டுவர ஒற்றைத்தாள் பிரதிகளை மற்றோரிடம் கொடுத்தபோதும், யாரையாவது ஒருவரைக் கிறிஸ்துவண்டை வழிநடத்தினச் சமயத்திலும் உமக்கிருந்த வாஞ்சையை சிந்தனைசெய்யும். ஆண்டவருக்கென்று நீர் எவ்வளவு உற்சாகத்துடன் ஊழியம் செய்தீர்! எவ்வளவு பிரியத்துடன் வேதாகமத்தை வாசித்தீர்! ஆனால் இன்று எப்ப‌டியிருக்கிறீர்? அந்த உணர்ச்சி இப்பொழுது இருக்கிறதா? உம் இருதயத்தினின்று கர்த்தரின் சந்தோஷம் போய் விட்டதா? வேத வாசிப்பையும், ஜெபத்தையும் நீர் அசட்டை செய்கிறீரா? ஆதியில் நீர் கொண்ட அன்பு மறந்துபோய் இப்பொழுது சகலமும் சாதாரணமாய்க் காணப்படுகிறதா? அப்படியானால் என் சிநேகிதனே, உமக்கு உயிர் மீட்சி அவசியம்.

ஆத்துமாக்களைப்பற்றிய பாரம் உன்னை விட்டு நீங்கிப் போயிற்றென்றால் உனக்கு உயிர் மீட்சி அவசியம்:
உனக்குப் பிரியமானவர்கள் அழிந்துபோகையில் நீ மோட்ச பாதையில் நடப்பது கூடிய காரியமா?

அவர்களைப்பற்றிய பாரம் உனக்கு இல்லை என்பது உண்மையா? அவர்கள் நரக பாதாளம் போகிறார்கள் என்று நீ தெளிவாய் அறிந்திருந்தும் நீ மன நிம்மதியோடு இருப்பது முடியுமா? உனது பெற்றோர், மனைவி, மக்கள், கணவன் இவர்களைக் குறித்தென்ன? அவர்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறார்களா? அல்லது அழிவின் பாதையில் இருக்கிறார்களா? அதைப்பற்றிய பாரம் உனக்கு இல்லையா?

என்னுடைய மகன் அல்லது மகள் இரட்சிக்கப்படவில்லை என்று அறிவேனாகில், நான் எப்படிச் சாப்பிடவும் தூங்கவும் முடியும்? அவர்களுக்காக நடு ராத்திரி மட்டும் தேவ சமுகத்தில் அழுது பிலம்புவேன். அவர்கள் இரட்சிக்கப்ப்டுமட்டும் ஆண்டவரை விடமாட்டேன். என் கண்கள் கண்ணீரினாலும் என் இருதயம் துக்கத்தினாலும் நிறைந்திருக்கும். அவர்கள் சரியான தீர்மானஞ் செய்யுமளவும் நான் இளைப்பாறமாட்டேன். என் குடும்பம் பிரிந்து போவதைப் பார்த்து நான் எப்படிச் சும்மாயிருப்பேன்? "நீயும், உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்" என்பதே கடவுளின் வாக்கு. அதை நம்புகிறேன்.
என் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் குணப்படும்படி விரும்புகிறேன். அப்படியில்லாவிடில் அதை நான் சகிக்க முடியாது.

என் மூத்த மக‌னை, நானும் என் மனைவியும் கிறிஸ்துவண்டை நடத்தினதினால், அவன் தன் ஒன்பதாவது வயதில் இரட்சிக்கப்பட்டான். என் பிரசங்கம் ஒன்றில் அவன் கடவுளின் சமுகத்தில் அழுத்தை நான் ஒருபொழுதும் மறக்கமுடியாது. அவன் வீட்டுக்குச் சென்றபோது, சிவந்த கண்களோடு தான் இரட்சிக்கப்பட விரும்புகிறதாக எங்களிடம் வந்து சொன்னான். அவன் தனது படுக்கப் பக்கத்தில் குணப்பட்டான். அவன் இப்போது டொரான்டோவிலுள்ள ஜெனரல் ஆஸ்பத்திரியில் டாக்டர் வேலைக்காக விசேஷித்த படிப்பு படிக்கிறான். கர்த்தருக்காக உழைக்க அவன் ஆவலாயிருக்கிறான்.

என் மகள் 10 வ‌யதில் இரட்சிக்கப்பட்டாள். அவள் படுக்கையண்டை நானும், அவள் தாயும் ஜெபித்தபோது, அவள் கிறிஸ்துவண்டை வழிநடத்தப்பட்டாள். அவளும் தன் இரட்சிப்பின் அவசியத்தை உணர்ந்து கண்ணீர் சிந்தினாள். அவளுக்கு இப்போது இரண்டு சிறு குழந்தைகளிருக்கின்றன. இன்றும் அவள் கர்த்தரின் பிள்ளையாகவே ஜீவிக்கிறாள்.

என் சின்ன மகன் இப்போது பாப்திஸ்து சபையில் சுவிசேஷகனாக இருக்கிறான். அவன் ஐந்து வயதாகிறதற்கும் இரட்சிக்கப்பட்டான். டொரான்டோவிலுள்ள மாசே என்னுமிடத்தில் நான் பிரசங்கம் செய்கையில் 3,400 மக்கள் உட்கார்ந்திருந்தனர். நான் அவர்களுக்கு அழைப்புக் கொடுத்தேன். 5 வயதுள்ள என் சொந்த மகன் உறுதியான தீர்மானத்துடன் என்னிடம் வருகிறதை நான் கண்டேன். பீடத்தின் பக்கம் வந்து, முழங்காற்படியிட்டு ஜெபித்தபோது, இயேசுநாதர் அவன் இருதயத்தில் பிரவேசித்தார்.

ஒரு குருவானர் ஒரு சுவிசேஷப் பிரசங்கம் செய்து, பின்பு ஜனங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்படியாக ஒரு தருணம் கொடாதபடி ஆசீர்வாதம் மட்டும் கூறித் தன் வீட்டிற்குப் போவது எனக்கு விளங்காத காரியமாயிருக்கிறது. ஒவ்வொரு ஞாயிரும் ஒருவராவது இரட்சிக்கப்டுவதைக் காணாமல் ஒரு போதகர் இருப்பது எனக்கு விளங்கவில்லை. ஒரு வக்கீல் தன் வழக்கில் ஜூரிகளின் அபிப்பிராயத்தைகேட்க ஆசைப்படுகிறதுபோல் ஒரு போதகரும் தன் பிரசங்கத்தின் பலனைக் காண ஆசைப்படவேண்டும். பலனைத் தருவேன் என்று வாக்கருளியிருக்கிறார். விதை விதைப்பதுமட்டுமல்ல, அறுவடை செய்வதும் சுவிசேஷகருக்கு நியமிக்கப்பட்ட சிலாக்கியமே.

என் ஊழிய காலம் முழுவதும் நான் அழைப்புக் கொடுப்பேன். ஒவ்வொரு ஞாயிறு இரவிலும் நான் ஆண்களையும் பெண்களையும் முன்னே வரும்படி அழைத்து விசாரனை அறைக்கு வந்து இரட்சகரை ஏற்றுக்கொள்ளச் சொல்லுகிறதுண்டு. நான் ஏமாந்துபோவது அபூர்வம் ஒருவரும் வரவில்லையென்றான் நான் என் வீட்டுக்குப் போய், தரையில் முகத்தைப் பதித்துக் கர்த்தரை நோக்கி, வருமாறு கதறுவேன். "என்னிடம் என்ன குறை இருக்கிறது? என்ன நடந்தது?

இன்று ஓர் ஆத்துமாவும் வரவில்லையே" என்பேன். நான் என்னையே குற்றப்படுத்திச் சொல்லுவேன். சில சமயம் நான் மிக்கக் கஷ்டமாய்க் காணப்பட்டால், எனக்கு உதவி செய்யும் ஊழியர்கள், ஆலயத்தில் தங்கள் தங்களைத் தாழ்த்தி அழுது ஜெபிப்பார்கள். யாராவது விசாரணை அறைக்கு வந்துவிட்டால், கர்த்தருக்குள் சந்தோஷப்பட்டு முகமலர்ச்சியோடு விசாரணை அறைக்கு போவார்கள். பலனை எதிர்பார்த்த அவர்கள் வெட்கப்படவில்லை. எப்படியும் பிரதி ஞாயிறு இரவிலும் சிலராவது வருவார்கள். சில சம‌யத்தில் ஏதோ காரணமாக பகிரங்கமாக ஒருவரும் வரவில்லையானாலும், அச்சமயந்திலும் பலன் பிந்திக் கிடைக்கும்.

"உன் விசுவாசத்தின்படியே உனக்கு ஆகக்கடவது." பலன் கிடைக்குமென விசுவாசியுங்கள்; அப்படியே கிடைக்கும். நீங்கள் விசுவாசத்துடன் அழைப்புக் கொடுத்தால் கடவுள் கிரியை நடப்பிப்பார். நான் பிரசங்கம் செய்ய ஆரம்பித்ததுமுதல், நான் அழைப்புக் கொடுக்கும்போது சிலராவது வருவார்கள் என்று எதிர்பார்ப்பேன்.

என் நண்பா, ஆத்துமாக்கள் பேரில் கவலை உனக்கில்லையானால் உனக்கு உயிர்மீட்சி அவசியம்.

பலன் காணாமல் வருடா வருடம் நீ திருப்தியாயிருந்தால் ஏதோ தப்பிதம் உன்னில் இருக்கிறது. நீ முழங்கால்படியிட்டு, மனஸ்தாபத்தோடு பாவ அறிக்கை செய்து, கர்த்தர் உன் உள்ளத்தில் உயிர்மீட்சியை உண்டாக்கும் மட்டும் ஜெபி. உன் இருதயம் அனல் கொண்டபின் மற்றவர்களையும் அனல் மூட்டிவிட உனக்குப் பெலன் உண்டாகும். முடிவில் உன் சபை முழுவதும் அனலுள்ளதாயிருக்கும்.

என்ன நேரிடும்?

உயிர்மீட்சி உண்டானால் என்ன நேரிடும்? உயிர்மீட்சியை விரும்பாத போதகர்களும், தேவ ஊழியரும், சபையாரும் இருக்கிறார்கள். உயிர்மீட்சி உண்டானால் மிஞ்சிய உற்சாகம் ஜனங்களுக்குள் உண்டாகும் என்ரும், ஆராதனைக்குப் பல இடையூறுகள் ஏற்படும் என்ரும் பயப்படுகிறார்கள் மாமூலாய் நடக்கும் ஜெப புத்தக ஒழுங்கையே நாம் கைக்கொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள். அப்போஸ்தலர் நடபடிகளில் இப்பேர்ப்பட்ட தடைகள், நேரிட்டதைப் பார்க்கிறோம். பேதுரு, பவுல் பிலிப்பு முதலானவர்களின் ஊழியத்தில் அடிக்கடி இடைஞ்சல்கள் நேரிட்டன.

உயிர்மீட்சி முதலாவது தேவனுடைய பிள்ளைகளுக்கு உண்டாகிறது; இரட்சிக்கப்படாதவர்களுக்கல்ல, எழுப்புதல் நடக்கும் சமயத்தில் இரட்சிக்கப்படாதவர்கள் கிறிஸ்துவண்டை கொண்டுவரப்படாமல் இருக்கமாட்டார்கள். தீப்பொறியின் மூலந்தான் நெருப்பு உண்டாக்கலாம். தீப்பொறி அவிந்து போனால் நெருப்பு உண்டாக்க முடியாது. இதைப்போலவே உயிருள்ளவர்களையே அனல் மூட்டமுடியும். செத்தவர்களை எழுப்ப முடியாது.

தேவனுடைய பிள்ளைகள் அக்கினியினால் நிரப்பப்படும் சாத்தானின் பிள்ளைகளும் நெருப்பைச் சூழ வந்து கூடுவார்கள். ஒரு வீடு நெருப்புப் பற்றினதென்றால் ஜனங்கள் பல திசைகளிலுமிருந்து அங்கு ஓடுவார்கள் இப்படியே உயிர்மீட்சியும் இருக்கிறது. ஒரு சபை அனல் கொண்டு பிரகாசிக்கும்போது, உலகத்தார் அதைக் காணவருவார்கள். ஆகவே, உயிர்மீட்சி முதலாவது கிறிஸ்தவர்களுக்குள் உண்டாகி, பின்பு ஆத்துமாக்களின் இரட்சிப்பில் வந்து முடியும். "நீர் எங்களைத் திரும்பவும் உயிர்ப்பிக்கமாட்டீரோ?" என்று அவன் அழுத்தமாய்க் கூறி, அப்பதத்தால் தேவனுடைய ஜனங்களைக் குறிப்பிடுகிறான்.

இரட்சிப்பு:

உயிர்மீட்சி உண்டானால் உலகத்திலுள்ளவர்கள் கிறிஸ்தவர்களிடம் ஓடி வருவது மட்டுமல்ல. ஆத்துமாக்களும் இரட்சிக்கப்படுவார்கள். ஜனங்களுக்குள் பாவ உணர்ச்சி ஏற்படும். பாவ பாரம் தோன்றும். தற்காலத்தில் பாவம் பாரமாகக் காணப்படவில்லை. அது தேவ பார்வையில் எவ்வளவு பயங்கரமானது என்பதை மக்கள் அறியாதிருக்கிறார்கள். ஆத்தும இரட்சிப்புக்குப் பாவ உணர்வு அவசியம். தேவ வல்லமை வெளிப்படுதலே உயிர்மீட்சி. நாம் தேவ வல்லமையை வெகு சொற்பமாய் அறிந்திருக்கிறோம். நமது ஆராதனைகளில் தேவ வல்லமை காணப்ப‌டுகிற‌தா? உயிர்மீட்சிக் கூட்டங்களில் தேவ சமுகம் இருப்பதை மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.

நமது ஆராதனைகளில் கடவுள் சமுகம் இருப்பதால் புறமதஸ்தர் தேவனுடைய வல்லமையைக் கண்டு வியப்ப‌டைகிறார்களா?

நியாய‌த்தீர்ப்பு:

உயிர்மீட்சி உண்டாகும் கால‌த்தில் இர‌ட்சிப்பு மாத்திர‌ம‌ல்ல‌, நியாய‌த்தீர்ப்பும் உண்டாகும். க‌ட‌ந்த‌ கால‌ உயிர்மீட்சிக‌ளைப்ப‌ற்றி ப‌டித்துப் பாருங்க‌ள். ம‌னித‌ர்க‌ள் துணிக‌ர‌மாய்த் தேவ‌ ஆவியான‌வ‌ரின் கிரியைக‌ளுக்கு எதிர்த்து நிற்கும்போது தேவ‌ன் அவ‌ர்க‌ளை உட‌னுக்குட‌னே த‌ண்டித்துத் தீர்ப்புச் செய்கிறார் என்று பார்க்கிறோம். சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் அன‌னியா ச‌ப்பீராளுக்குச் செய்த‌துபோல் ம‌ர‌ண‌த‌ண்ட‌னையும் கொடுக்கிறார். சார்ல‌ஸ் பின்னி, வெஸ்லி இவ‌ர்க‌ள் இத‌ற்குச் சாட்சிக‌ளாயிருக்கிறார்க‌ள். இவ‌ர்க‌ள் ஊழிய‌ கால‌த்திலும் எதிர்த்த‌வ‌ர்க‌ளுக்குத் தேவ‌ன் நீதி செய்தார். உயிர்மீட்சி கால‌த்தில் தேவ‌னை எதிர்ப்ப‌தும், அவ‌ர‌து காரிய‌ங்க‌ளில் வீணாக‌த் த‌லையிடுவ‌தும் மோச‌மாய் முடியும் என்ப‌து ச‌த்திய‌ம். ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு ஓர் எச்ச‌ரிப்பாக‌ நாஸ்தீக‌ரை உட‌னுக்குட‌னே க‌ட‌வுள் க‌ண‌க்குக் கேட்கிறார். இத‌ன் மூல‌ம் க‌ட‌வுள் உயிரோடிருக்கிறார் என்று ஜ‌ன‌ங்க‌ள் அறிந்து கொள்ளுகிறார்க‌ள்.

கிளார்க் என்ற‌ மிஷ‌னெரியார் கூறின‌ ஒரு ச‌ம்ப‌வ‌த்தைச் சொல்லுகிறேன். ம‌துக்க‌டைக்கார‌ன் ஒருவ‌ன் உயிர்மீட்சிக் கூட்ட‌த்தை எதிர்த்துப் பேசிக் கொண்டிருந்தான். அவ‌ன‌து வாடிக்கைகார‌ர்க‌ள் வ‌ராம‌ல் நின்றுவிட்ட‌தே இத‌ற்குக் கார‌ண‌ம். ஒருநாள் இர‌வில் அவ‌ன் பிர‌ச‌‌ங்கியாரைப் ப‌ய‌முறுத்தி, ஜ‌ன‌ங்க‌ளைத் திரும்ப‌வும் த‌ன் க‌டைக்கு இழுக்க‌ வேண்டுமென‌த் தீர்மான‌ஞ் செய்தான். அப்ப‌டியே அன்று இர‌வில் அந்த‌ உயிர்மீட்சிக் கூட்ட‌த்திற்குப் போனான். கிளார்க் பிர‌ச‌ங்கியார், பிர‌ச‌ங்க‌ வ‌ச‌ன‌ம் தெரிந்து கொள்ளுத‌லைப்ப‌ற்றி நெடுநேர‌ம் திகைத்துக் கொண்டிருந்தார். க‌ட‌வுள் அவ‌ருக்குத் திரும்ப‌ காட்டின‌ வ‌ச‌ன‌மோ "உன் வீட்டுக் காரிய‌ங்க‌ளை ஒழுங்குப‌டுத்து, நீ ம‌ரித்துப் போவாய், நீ பிழைக்க‌மாட்டாய்" என்ப‌தே, பிர‌ச‌ங்கியார் இவ்வாக்கிய‌த்தை விட்டுவிட‌ முய‌ன்றும் முடியாத‌தால், பிர‌ச‌ங்க‌ மேடைமீது ஏறு நின்று, அந்த‌ வ‌ச‌ன‌த்தைக் கூறின‌வுட‌ன், அந்த‌க் க‌டைக்கார‌ன் எழுந்து நின்று அவ‌ர்மேல் சாப‌ம் கூறினான். திடீரென‌ அவ‌ன் ச‌த்த‌ம் நின்ற‌து; தொனியில் நேர்மாற்ற‌ம் உண்டான‌து இரும‌ல் வ‌ந்த‌து. இர‌த்த‌ம் வாயிலிருந்து வெளிவ‌ந்த‌து. அடுத்த‌ வினாடியில் அவ‌ன் உயிர‌ற்ற‌வ‌னாய்த் த‌ரையிலே விழுந்தான். க‌ட‌வுளின் தீர்ப்பு அத்த‌னை ச‌டுதியாய் வ‌ந்த‌தைக் க‌ண்ட‌ பாவிக‌ள் இர‌ட்சக‌ர‌ண்டை வ‌ந்து, ம‌ன்னிப்புப் பெற்று இர‌ட்சிப்பும், நியாய‌த்தீர்ப்பும் ந‌டைபெறும்ப‌டி க‌ட‌வுள் செய்கிறார்.

அபிவிருத்தி:

உயிர்மீட்சி உண்டானால் ச‌பை, அநேக‌ வ‌ருட‌ங்க‌ளில் செய்ய‌க்கூடிய‌ ஊழிய‌த்தை சில‌ வார‌ங்க‌ளில் செய்து நிரைவேற்றுகிற‌து. இத‌ற்கு அத்தாட்சியாக‌ சில‌ உதார‌ண‌ங்க‌ளைக் கூறுகிறேன்.

1904 இல் வேல்ஸ் நாட்டில் இவான் ராப‌ர்ட்ஸ் என்பாரின் மூல‌ம் ந‌ட‌பெற்ற‌ உயிர்மீட்சிக் கூட்ட‌ங்க‌ளால் நான் அன‌ல்கொண்டேன். நான் அவ‌ர் வீடு சென்று அவ‌ரைக் க‌ண்டு பேசினேன். அவ‌ர் சாதார‌ண‌ வீட்டில் வ‌சித்தார். அவ‌ர் ஓயாது வாசித்துக்கொண்டேயிருப்பார். க‌ட‌வுளின் க‌ர‌ம் அவ‌ரைப் பிடித்து, வ‌ல்ல‌மையாய் அவ‌ரை வேல்ஸ் நாட்டில் உப‌யோகித்த‌து, அவ‌ர் ந‌ட‌த்தின‌ உயிர்மீட்சிக் கூட்ட‌ங்க‌ளின் மூல‌ம் ஐந்து வார‌ங்க‌ளில், 20,000 பேரை சபையில் சேர்ந்தார்க‌ள். அமெரிக்காவிலும், க‌ன‌டாவிலும் பிரிட்ட‌னிலும் உள்ள‌ எல்லாச் ச‌பைக‌ளின் குருக்க‌ளும் சேர்ந்து 5 வார‌ங்க‌ளில் 20,000 பேரைக் குண‌ப்ப‌டுத்திச் ச‌பையில் சேர்க்க‌ முடியுமா என்று நீங்க‌ளே சொல்லுங்க‌ள். சாதார‌ண‌ ச‌பை ஊழிய‌த்தின்மூல‌ம் இது ந‌டைபெற‌ முடியாது என்ப‌து திண்ண‌ம் அல்ல‌வா?

சார்ல‌ஸ் பின்னி என்ப‌வ‌ர் அமெரிக்க‌ ஐக்கிய‌ மாகாண‌த்தில் ஊழிய‌ம் ஆர‌ம்பிக்கையில் அங்கு இர‌ண்டு இல‌ட்ச‌ம் ச‌பை அங்க‌த்தின‌ர் ம‌ட்டும் இருந்தார்க‌ள். ஆனால் அவ‌ர் ஊழிய‌ஞ்செய்த‌ சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்குள் முப்ப‌து இல‌ட்ச‌த்திற்குமேல் அங்க‌த்தின‌ர்க‌ள் இருந்தார்க‌ள். ஆம், ஒரு ம‌னித‌னுடைய‌ ஊழிய‌த்தினால் எத்த‌னை அற்புத‌மான‌ செய‌ல்! வேறு எந்த‌ இட‌த்திலாவ‌து இத்த‌னை திர‌ள் ப‌ல‌ன் கிடைத்த‌தா? க‌ட‌வுள் சாதார‌ண‌ ச‌பைக‌ளைக் கொண்டு அநேக‌ வ‌ருட‌ங்க‌ள் செய்யும் ஊழிய‌த்தால் உண்டாகும் ப‌லங்க‌ளைவிட‌, உயிர்மீட்சிக் கால‌ங்க‌ளாகிய‌ சில‌ வார‌ங்க‌ளில் அதிக‌ப்ப‌ல‌ன் உண்டாகும்ப‌டி செய்கிறார் என்ப‌து உண்மைய‌ல்ல‌வா?

பின்னி பிர‌ச‌ங்கியார், நியூயார்க் ந‌க‌ரில், உயிர்மீட்சிக் கூட்ட‌ம் ந‌ட‌த்துகையில் 1,00,000 பேர் ச‌பையில் சேர்ந்தார்க‌ளாம். உயிர்மீட்சி இல்லாம‌ல் எப்ப‌டி ந‌ட‌க்குமா?

ஆர‌ம்ப‌கால‌ மெத‌டிஸ்டு பிர‌ச‌ங்கிமார்க‌ள், க‌ன‌டாவுக்கும், ஐக்கிய‌ மாகாண‌த்துக்கும் வ‌ந்த‌போது அவ‌ர்க‌ள், குருக்க‌ளாக‌ மாத்திர‌ம‌ல்ல‌, எழுப்புத‌ல் பிர‌ச‌ங்கிமார்க‌ளாக‌வே வ‌ந்தார்க‌ள். அவ‌ர்க‌ள் எங்கு சென்றார்க‌ளோ அங்கெல்லாம் எழுப்புத‌ல் அக்கினியைக் கொளுத்தினார்க‌ள். அத‌ன் ப‌ல‌னாக‌வே த‌ற்ச‌ம‌ய‌ம் ஐக்கிய‌ மாகாண‌த்தில் ஒரு கோடி மெத‌டிஸ்டு ச‌பையார் இருக்கிறார்க‌ள். மெத‌டிஸ்டு ச‌பை உயிர்மீட்சிக் கூட்ட‌ங்க‌ள் மூல‌மாக‌வே ஸ்தாபிக்க‌ப்ப‌ட்ட‌து. இதுவே உயிர்மீட்சிக் கூட்ட‌ங்க‌ளில் தேவ‌ன் ந‌ட‌ப்பிக்கிற‌ கிரியை.

9. புலம்பித் தவிக்கும் இவ்வுலகத்திற்குத் தேவையானது சுவிசேஷப் பிரபல்யமே




இது இருபதாம் நூற்றாண்டு. தீயச் செயல்கள் எங்கும் நடைபெறுகின்றன. கள்ள மார்க்கங்கள் எப்பக்கங்களிலும் அதிகரிக்கின்றன. சாத்தானுடைய வல்லமையான கருவியாகிய பொதுவுடைமை, கிறிஸ்து மார்க்கத்தை மேற்கொள்ள அச்சுருத்துகிறது. விஷவாயுக்குண்டுகள் மக்களை அழிக்க ஆயத்தமாயிருக்கின்றன.

மனித சரித்திரத்தில் வரப்போகும் 20 வருடங்கள் மிகவும் பயங்கரச் சம்பவங்கள் நடக்கும் காலமாயிருக்கும். உலகைக் கொந்தளிக்கச் செய்யும் அடையாளங்கள் சீக்கிரம் நடைபெறப் போகிறது.
உலக மாநாடுகள் பல நடைபெறுகின்றன. சில நன்மைக்காக, சில தீமைக்காக நடைபெறுகின்றன. மனுமக்கள் அழிவை நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். பயங்கரமான புரட்சிகள் ஆங்காங்கு நடைபெறுமாபோலத் தெரிகிறது. சிருஷ்டிகள் சகலமும் ஏகமாய்த் தவித்துப் பிரசவ வேதனைப்படுகிறது. கர்த்தரின் வருகை சமீபம் என்று காட்டுகின்றன.

சுவிசேஷப் பிரபல்யத்தின் முக்கியத்துவம்

சுவிஷேசம் தேவபெலனுள்ளதாயிருக்கிறது. சுவிசேஷமே இக்காலத்தில் அறிவிக்கப்படவேண்டியது அவசியம். மார்க்க எழுப்புதல் இல்லாவிடில் நரஜாதி நாசமாய்ப்போம். பற்பல விஷயங்களில் நாம் ஒன்றுபடாவிட்டாலும் சுவிசேஷம் என்னும் விஷயத்தில் ஒன்றுப்படக்கூடும். ஆத்துமாக்களை ஆண்டவரிடம் கொண்டுவரும் இச்சுவிசேஷ வேலையில் நாம் ஒன்றுபட்டு வேலை செய்ய முடியும். சுவிசேஷகர் அடிக்கடி நமது சபைகளில் ஊழியம் செய்ய நாம் இடம் கொடுக்க வேண்டும். புது ஊழியருக்கு ஜனங்கள் கவனமாய்ச் செவி கொடுப்பார்கள். நம்மால் ஆதாயம் பண்ண முடியாத சில ஆத்துமாக்கள் புதிதாய் வந்த சுவிசேஷகரால் ஆதாயம்பண்ண முடியும்.

டொரான்டோவில் நான் நடத்தின சுவிசேஷப் பிரபல்யக் கூட்டங்கள் 6 மாதங்கள் நடைபெற்றன. தவறாது ஒவ்வொரு இரவிலும் நடந்தன. ஞாயிற்றுக்கிழமைகளில் 2,3 ஆராதனைகளும் ஒழுங்கு செய்யப்பட்டன. அக்கூட்டங்களிலெல்லாம் நான் தலைமை தாங்கினேன். அந்த 6 மாதக்காலங்களில் 12 பேருக்கு மேற்பட்ட பலவித சுவிசேஷகர்கள் வந்து பிரசங்கம் செய்தனர். ஜனங்கள் ஆவலுடன் திரளாய் வந்தனர். நூற்றுக்கணக்கானோர் இரட்சிக்கப்பட்டார்கள். அக்கூட்டங்கள் மூலம் வேலை பலப்பட்டது. அவ்வருடந்தொடங்கி, கடந்த வருடங்களிலெல்லாம் ஒவ்வொரு வருடத்திலும் 2 அல்லது 3 சில சமயங்களில் 6 சுவிசேஷப் பிரபல்யக் கூட்டங்க்களை நான் ஒழுங்கு செய்து நடத்துகிறேன்.

இவைகளெல்லாம் ஜனங்க்களின் ஆவிக்குரிய ஜீவியத்தை ஊக்குவித்து, புது உற்சாகத்தையும் அவர்களில் உண்டு பண்ணுகிறது. விசேஷித்த கூட்டங்கள் இல்லாத சமயங்களில் நானே பிரசங்கம் செய்கிறதுண்டு. நான் ஒருவனே பிரசங்கம் செய்கிறவனாயிராமல் வெளியிலிருந்து பிரசங்கிமாரை அழைத்துச் சுவிசேஷத்தை ஜனங்களுக்கு அறிவித்து வருகிறேன்.

சுவிசேஷ ஊழியத்தின் கஷ்டங்கள்

சுவிசேஷப் பிரபல்யமும், எழுப்புதல் கூட்டங்களும் ஒரு பட்டணத்திலே நடைபெறுமானால் அவ்விடத்திலுள்ள சகல திருச்சபைகளும், ஊழியரும் ஒன்றுபட்டு அவைகளில் பங்குபெற்ற காலம் இருந்தது தற்காலத்திலோ, ஒரு சுத்த சுவிசேஷகர் வந்து ஓர் ஆலயத்தில் பிரசங்கம் செய்தால் மற்றச் சபைகளும், போதகரும் அக்கூட்டங்களில் பங்குபெறாமல், தங்கள் சொந்த ஆலயங்களிலேயே வழக்கம்போல் ஆராதனை நடத்துகிறதுண்டு. இது சரியல்ல ஆத்தும ஆதாயம் பண்ணும் இவ்வூழியத்தில் சகல சபைகளும் ஒன்றுபட்டு உழைப்பதே நல்ல முறை.

நமக்கு வேத ஆராய்ச்சிக் கூட்டங்களும் மாநாடுகளுந்தான் தேவை; சுவிசேஷப் பிரபல்யம் அவசியமில்லை எனச் சொல்லுகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் சுவிசேஷப் பிரபல்யத்தினாலும், எழுப்புதல் கூட்டங்களினாலும் மட்டுமே அனேக ஜனங்கள் உற்சாகமடைந்து தேவ திருவசனங்களை வாசிக்கவும், ஆராய்ச்சி செய்யவும் ஏவப்படுகின்றனர். இதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்யும்போது ஜனங்கள் திருப்பப்பட்டு வேத ஆராய்ச்சி செய்வது வழக்கம். வேத பாட வகுப்புகளும் ஒழுங்கு செய்கிறதுண்டு தனித்தாள் ஊழியஞ் செய்யப் போதனை கொடுப்பார்கள். புதிதாய் குணப்பட்டவர்கள் சாட்சி கூறி, பொதுக் கூட்டங்களில் ஜெபம் செய்வார்கள். சுவிசேஷப் பிரபல்யம் இல்லாதவேதபாடம் தேங்கி நிற்கும் தண்ணீரைப் போன்றது, சுவிசேஷப் பிரபல்யமோ வேத ஆராய்ச்சியைத் தூண்டிவிட்டு, ஏவி எழுப்பி ஆசீர்வாதம் உண்டாக்கும்.

சுவிசேஷப் பிரபல்யக் கூட்டங்களுக்குப்பின் தொடர்ச்சியான ஊழியஞ் செய்வது நல்லது. சுவிசேஷகர் மருத்துவச்சியைப் (நர்ஸ்) போலிருக்கிறார். மருத்துவச்சி பிள்ளை உலகிற்பிறப்பதற்கு உதவி செய்கிறாள். ஆனால் அவள் எக்காலமும் பிள்ளையின் பக்கத்திலிருந்து அதை வளர்க்க முடியாது. பெற்றோரோ அதைக் கவனிக்க வேண்டும். இதைப்போன்றே தொடர்ச்சியான வேலை இருக்கிறது. சுவிசேஷகர் சென்றபின், பெற்றோரைப் போலிருக்கும் போதகரும், ஓய்வு நாள் பாடசாலை ஆசிரியரும், வாலிபர் சங்கத்தின் தலைவர்களும் புதிதாய்க் குணப்பட்டவர்களைக் கவனித்து வர வேண்டியது, அவர்களுக்கு வேதத்தின் முக்கிய சத்தியங்களைக் கற்றுக் கொடுக்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் சத்தியத்தில் நிலை நின்று, இயேசுநாதருக்கு உற்சாகமுள்ள ஊழியக்காரராக விளங்குவார்கள்.

பல சுவிசேஷப் பிரபல்யக் கூட்டங்களில் போதகரைக் குறைவாய்ப் பேசுகிறதுண்டு. போதகரின் கரங்களைத் தாங்கி அவர்களுக்கு உதவிசெய்து ¨தைரியமூட்டுகிற சுவிசேஷப் பிரபல்யக் கூட்டங்களே தேவை. ஒரு சுவிசேஷகர் ஜனங்களுக்குமுன், அச்சபையின் போதகரைக் குற்றஞ்சாட்டி, கண்ணியக் குறைவாய்ப் பேசுவது பெரிய தப்பு.

ஒரு போதகருக்கு எண்ணற்ற போராட்டங்கள் இருக்கின்றன. ஜனங்களுக்கு முன் அவரைக் கனம் செய்யவேண்டும். இக்காரணத்தினால், ஒவ்வொரு சுவிசேஷகரும் சில வருடங்களாவது போதகராக ஊழியஞ் செய்ய அனுப்பப்படவேண்டும். அப்பொழுது அவர் போதகருடைய கஷ்டங்களில் அனுதாபங்கொள்ளவும், அவருக்கு எவ்வித்தில் உதவி புரியவும் அறிந்துகொள்வார்கள். மேற்கூறிய காரணத்தினாலேதான், அநேக சபைகள் சுவிசேஷப் பிரபல்யக் கூட்டங்களை வெறுக்கின்றன.

நான் போதகராகவும், சுவிசேஷகராகவும் என் அனுபவத்தைக் கொண்டு சொல்லுகிறேன். போதகரது ஊழியமே, சுவிசேஷகரது ஊழியத்தைவிட மிகவும் கஷ்டமானது. ஒரு சுவிசேஷகர் 2 அல்லது 3 வாரங்கள் ஓர் இடத்தில் ஊழியஞ் செய்து, அதன்பின் யாதொரு கஷ்டமும் இன்றி இவ்வூரை விட்டுப் போய் விடுவார். ஒரு போதகரோ அங்கேயே இருந்து பல வகைக் கஷ்டங்களையும் சகிக்க வேண்டும். இக்காரணத்தை முன்னிட்டு நான் என் சபையை விட்டு அடிக்கடி வெளியே போய், சுவிசேஷக் கூட்டங்களில் பங்கு பெறுகிறதுண்டு. சிறு தகராறுகளை நான் மறந்து போக இது ஏதுவாகும். ஆகவே, சுவிசேஷகர்கள் போதகரோடு ஒத்துழைத்து, அவர்களை உற்சாகப் படுத்தி, ¨தைரிய‌மூட்டி உதவி செய்ய வேண்டும்.

சுவிசேஷப் பிரபல்யத்தின் அவசியம்

உலகசுவிசேஷகர்கள் எல்லாரும் மரித்துப்போனார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? இப்போது ஒருவரும் உயிரோடில்லை. டி.எல். மூடி போய்விட்டார் கே.ஏ. டோரி, ஜே உல்பர் சேப்மேன், பில்லிசண்டேயும், தங்கள் வேலையை முடித்துப் போய்விட்டனர். ஆகவே மிகவும் சொற்ப பேரே இவர்களின் ஸ்தானத்திலிருக்கிறார்கள். வேத கலாசாலைகள் தற்சமயம் போதகர்களையும், மிஷனெரிகளையுமே ஆயத்தஞ் செய்கிறதேயொழிய சுவிசேஷகரைப் பக்குவப்படுத்துகிறதில்லை. எத்தனை பேர் சுவிசேஷப் பிரபல்யத்தின் சரித்திரத்தையும், எழுப்புதல் சரித்திரத்தையும் எடுத்துப் படிக்கிறார்கள்? பிரசித்தி பெற்ற சுவிசேஷகர், எழுப்புதல் பிரசங்கிமார் இவர்கள் ஜீவிய சரிதையையும், ஊழியமுறைகளையும் பற்றி எத்தனை பேர் படிக்கிறார்கள் எத்தனை உபாத்திமார் எப்படிச் சுவிசேஷக் கூட்டங்களை நடத்த வேண்டுமென்று தங்கள் மாணவருக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள்?

கனடாவில் சுவிசேஷகர்களை நியமித்த காலமிருந்தது. இவ்வழக்கம் இப்போது பல சபைகளில் இல்லை. சகல தேசங்களுக்கும் தற்சமயம் வேண்டியது சுவிசேஷகர்களைப் படைகளாகச் சேர்த்து, ஒவ்வொரு இடத்திற்கும் அனுப்பி, ஜனங்கள் கடவுளண்டை திருப்பும்படி கூடி அறிவிக்கச் செய்வதே.
சுவிசேஷப் பிரபல்யக் கூட்டத்திற்கும், எழுப்புதல் கூட்டத்திற்கும் பெரிய வித்தியாசம் உண்டு. சுவிசேஷக் கூட்டம் எழுப்புதல் கூட்டம் அல்ல. ஆனால் அது எழுப்புதல் கூட்டமாக மாறலாம்.

சுவிசேஷக் கூட்டங்க்களில் உலகத்துக்கடுத்த காரியங்களைப் பேசுதல் நல்லதல்ல. விசேஷமாக பண விஷயமக அதிகமாய்ப் பேசுவது சரியல்ல. ஒவ்வொரு சுவிசேஷகரும் போதகரைபோல ஒழுங்கான சம்பளம் தலைமை ஸ்தாபனத்தின்மூலம் பெறுவது நல்லது. அப்படியானால்தான் பணவிஷயமாய் அவரைக் குறித்துக் குறைகூற இடமிராது.

எனக்கு இவ்வளவு பணம் தேவை எனக்கேட்கிற வழக்கம் எனக்குக் கிடையாது. தேவனுடைய பிள்ளைகள் தங்கள் இருதயத்தில் ஏவப்பட்டுக் கொடுக்கிறதையே நான் பெற்றுக் கொள்ளுகிறதுண்டு. சில சமயங்களில் குறைவாய்க் கொடுப்பார்கள். வேறு சமயங்களில் நான் எதிர்பார்ப்பதற்கு அதிகமாய்க் கொடுக்கிறது உண்டு. கடவுளின் நாம மகிமைக்கென்று நாம் ஊழியஞ் செய்யும்போது, அவர் ஒரு பொழுதும் நமக்கு குறைவு வைக்கிறதில்லை. அநேகர் சுவிசேஷக் கூட்டங்கள் அல்லது எழுப்புதல் கூட்டங்களின் மூலமாகவே இரட்சிக்கப்பட்டதாகத் தெரிகிறது. விசேஷித்த கூட்டங்களின் மூலமாக 100-க்கு 62 பேர் கிறிஸ்துவினிடமாய் இழுக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே, வாலிபர்கள் சுவிசேஷ பிரலயத்தில் ஆர்வம் கொண்டு நமக்கு முன் உழைத்த பெரியோர்களின் ஸ்தானத்தில் வந்து இவ்வூழியத்தை நிறைவேற்றுவது அவசியம்.

சுவிசேஷப் பிரபல்யத்தின் பலன்கள்

நான் அநேக வருடங்களாக மிஷன் ஊழியத்திலும் சுவிசேஷப் பிரபல்யத்திலும் ஈடுப்பட்டிருக்கிறேன். முந்தின காலங்களில் ஒவ்வொரு வருடமும் சராசரி 500 பேர் குணப்பட்டார்கள். புதிதாய் இரட்சிக்கப்பட்டவர்கள் கூட்டங்களுக்கு வந்தப்படியால் பழகிய கிறிஸ்தவர்கள் முந்தி வந்தாலொழிய அவர்களுக்கு உட்கார இடமில்லாமல் போயிற்று. ஜனக்கூட்டம் அத்தனை திரளாயிருந்தபடியால் தீ அணைக்கும் அதிகாரி ஆபத்து உண்டாகாதபடி கூட்டத்தை குறைக்கும்படி என்னை வேண்டிக் கொள்ள வேண்டியதாயிற்று. நான் இச்செய்தியை ஜனங்களுக்கு அறிவித்தபோதிலும் ஜனங்கள் அதிதிரளாய் வந்து உட்காருவதற்கும் இடம் இல்லாமல், சுவர் ஓரமாகவும், படிகளிலும் நின்றுகொண்டிருந்தார்கள். அனேகர் இடமின்றி வீட்டுக்குத் திரும்பிப்போனார்கள். எங்கள் ஆலயத்தில் ஒரு பெரிய கீதவாத்திப் பெட்டி இருந்தது. அது அதிக இடத்தை அடைத்தபடியால் அது விற்கப்பட்டது. அந்த இடத்தில் ஒரு பெரிய 'காலரி' கட்டப்பட்டு அதில் அநேகர் உட்காரும்படி வசதி ஏற்பட்டது. கூட்டங்களைப் பத்திரிகைக‌ளில் விளம்பரம் செய்வதை நிறுத்தவேண்டியதாயிற்று. அப்படியிருந்தும் ஒவ்வொரு ஞாயிறு இரண்டாயிரம் ஜனங்களுக்கு மேற்பட்டவர்களுக்கு நான் பிரசங்கம் செய்தேன்.

சுவிசேஷப் பிரபல்யம் ஆலயத்தை ஜனங்களால் நிரப்பக் கூடியதாயிருக்கிறது. வாரா வாரம், வருடா வருடம் அப்படியே நிரம்புகிறது. இதை நான் ரூபித்துக் காட்டியிருக்கிறேன். பேர்ஸ்டன் பட்டணத்தில் பார்க் தெஉ ஆலயத்தில் நான் நடத்தின சுவிசேஷக் கூட்டத்தில் ஒரு பெரிய மார்க்க சீர்திருத்தம் நடந்தது. 200-கு மேற்பட்டவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதாகத் தீர்மானம் செய்தார்கள்.

கடவுள் அதிசயகரமாகக் கிரியை நடப்பித்தார். சுவிசேஷப் பிரபல்யம் பார்க் தெரு சபைக்கு செய்த அதே கிரியைகளை மற்றச்சபைகளுக்கும் செய்யக் கூடியதாயிருக்கிறது. அச்சபையின் போதகரே இதற்குச்சாட்சி கூறுவார்.

ஆஸ்திரேலியாவிலும், நியூசிலாந்திலும் நடந்த சுவிசேஷ பிரபல்யக் கூட்டங்கள் மிகப் பெரியவை. கூடிவந்த ஜன வெள்ளத்திற்குத் தகுந்த இடங்களைக் கண்டு பிடிக்க முடியாமல் இருந்தது. நான் தனிமையாகவே அக்கூட்டங்க்களில் பேசினேன். ஆனாலும் ஆரம்பத்திலிருந்தே கடவுள் தம் கிரியையை நடப்பித்தார். அவைகளைப்பற்றிய விவரங்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன. 1938 ஆம் வருடத்தில் நடைபெற்ற சுவிசேஷக் கூட்டங்களை ஆஸ்திரேலியா, நியூஜிலாந்து மக்கள் ஒருபொழுதும் மறக்கவே மாட்டார்கள், நான் குளிர்க் (முறை) காய்ச்சலினால் தாக்கப்பட்டு, மிகவும் பலவீனனாயிருந்தும் கடவுள் தம் கிரியையை நடப்பித்தார். ஆதியோடந்தமாய் அற்புதமாகவேயிருந்தது. குறைந்தது 1000 பேர் கிறிஸ்துவைத் தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள். கூட்டங்கள் முடிவடைவதற்குள் அவர்கள் ஏன் உடன் ஊழியக்காரர்களாக மாறிவிட்டார்கள். அச்சம்பவம் என்றும் மறக்கமுடியாத ஒரு சம்பவம், பலமுறை அவ்விடங்க்களுக்கு வரும்படி நான் அழைக்கப்பட்டும் நான் அங்குபோக முடியாமற்போயிற்று.

ஜமைக்காத் தீவில் 1948 ஜனவரியில் நடந்த சுவிசேஷக் கூட்டங்கள் எழுப்புதல் கூட்டங்களாகவும் மாறின. இக்கூட்டங்க்களை நானும் என் மனைவியும், மகள் பவுல் பிரசங்கியாரும் அவரது மனைவியும் நடத்தினோம். மாலை வேளைகளில் அத்தீவிலுள்ள பெரிய கட்டடத்தில் கூட்டங்கள் நடந்தன. மக்களில் அநேகருக்கு உட்கார இடமற்று நின்றுகொண்டிருந்தார்கள். இரவு கூட்டங்களுக்காக பந்தயச் சாலையை உபயோகித்தோம். சுமார் 5,000 பேர் வருவார்கள் என்று தலைவர் எதிர்பார்த்தார். முதல் இரண்டு இரவுகளில் 4,000 பேரும், மீதியான இரவுகளில் ஆறாயிரம் பேரும் ஆஜராயிருந்தனர் இரண்டாவது வாரத்தில் ஒவ்வொரு இரவிலும் 10000 பேர் வந்தனர். கடைசி இரவிலோ குறைந்தது பதினைந்தாயிரம் பேர் வந்தனர்.

இரவு தோறும் 100 அல்லது 200 பேர் எங்கள் அழைப்புக்கு இணங்கி முன் வருவார்கள். கடைசி இரவில் 480 பேர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். தீர்மானம் செய்தவர்களின் மொத்த எண்ணிகை 2,000. ஜனங்கள் மனோ தாகத்தால் ஆராதனை ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னமேயே கூடிவிடுவார்கள். கூட்டம் முடிந்து மக்கள் கலைந்து செல்ல சுமார் அரைமணி நேரம் செல்லும். அதன்பின்புதான், முன்னால் வந்து நிற்கும் ஒப்புக்கொடுத்த பிள்ளைகளோடு நாங்கள் பேசமுடிந்தது. இதற்கு முன் ஜமைக்காவில் வேறெந்த விசேஷத்திற்காகவும் இத்தனை ஜனங்கள் கூடினதில்லை என்று தெரிகிறது அக்கூட்டங்கள் மூலமாக உண்டான எழுப்புதலையும், ஆசீர்வாதங்களையும் ஒருவரும் ஒருக்காலத்திலும் மறக்கவில்லை.

சுவிசேஷப் பிரபல்யத்தின் மகிழ்ச்சி

நான் ஆஸ்திரேலியாவில் சிட்னி என்னுமிடத்தில் தேவ ஊழியருக்கென்று சுவிசேஷப் பிரபல்யதின் பேரில் பிரசங்கம் செய்தேன். அது முடிந்தவுடன் ஒருபோதகர் துக்கமுகத்துடன் என்னிடம் வந்து "டாக்டர் ஸ்மித், நீங்கள் சொல்லுகிறதை நன்றாய் அறிந்து சொல்லுகிறீர்களா?" என்று கேட்டார். நான் "நீங்கள் எதைப்பற்றிச் சொல்லுகிறீர்கள்?" எனக் கேட்டேன். அவர் திரும்பவும் "நீங்கள் நன்றாய் அறிந்திருக்கிறீர்களா?" என்றார். நான் மறுபடியும் "எதைப்பற்றிச் சொல்லுகிறீர்கள்?" என்றேன். அதற்கு அவர் "ஒரு பிரஸ்பித்தீரியன் குரு, ஜனங்களை முன் வரும்படி அழைப்பது சரியா?" என்று கேட்டார். அப்பொழுது நான் சொன்னதாவது: "நானும் ஒரு பிரஸ்பித்தீரியன் சபைப் சகபோதகர்தான். நான் எக்காலத்திலும் அழைப்புக் கொடுத்து வாழ்கிறேன். நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் எழுந்து வந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுகிறதை நான் கண்டுகொண்டு வருகிறேன்" என்றேன். ஆனால் அவர் "நாங்கள் அப்படிச் செய்கிற வழக்கம் கிடையாது" என்றார் "அது எனக்குத் தெரியும், எனினும் ஏன் பிரஸ்பித்தீரியன் குரு அழைப்புக் கொடுக்கக் கூடாது?" என்று திரும்பவும் கேட்டேன்.
அவர் துக்கமுகத்துடன் போய்விட்டார். அதே வாரத்தில் திங்கள் இரவில் நான் பிரசங்க பீடத்திற்குச் செல்லும் சமயத்தில் அந்தக் குரு அதிக பிரயாசப்பட்டு, இரண்டு வாலிபப் பெண்களை என்னிடம் கூட்டிக்கொண்டு வந்தார். பக்கத்தில் வரவே, பிரகாசமான முகத்துடன் அவர் என்னை நோக்கி "அது கிரியை செய்கிறது, அது கிரியை செய்கிறது" எனச் சத்தமிட்டு கூறினார். என்னவென்று நான் அறியக்கூடாமல் "என்ன கிரியை செய்கிறது?" என்று அவரிடம் கேட்டேன். "ஏன்? நீங்கள் சனிக்கிழமை சொன்னது" எனப் பதிலளித்தார். மேலும் அவர் சொன்னதாவது: "என் ஜீவியத்தில் முதல் தடைவையாக ஞாயிற்றுக்கிழமை நான் ஜனங்களுக்கு அழைப்பு கொடுக்க ஆரம்பித்தேன். நான் அடைந்த பலனைப்பாருங்கள்" என்று சொல்லி அந்த இரண்டு பெண்களையும் எனக்கு முன் நிறுத்தினார். நான் அவர்களிடம் கேள்வி கேட்டேன். அவர்கள் இருவரும் இரட்சிக்கப்பட்டவர்கள் எனக்கண்டுக் கொண்டேன்.
காரியம் எப்படியென்றால், அவர் பயத்தோடும் நடுக்கத்தோடும் அதற்கு முந்தின தினம் அழைப்புக் கொடுத்தார் அப்பொழுது இரு கரங்களும் உயர்த்தப்பட்டன. என்ன செய்கிறதென்று அறியாமல், அவர் அந்த இருவரையும் எழுந்து நிற்கச் சொன்னார். இருவரும் எழுந்து நின்றனர் அப்போது, என்ன செய்வதுதென்று நிச்சயமற்றவராயிருந்தார். நான் செய்வதை அவர் நினைவு கூர்ந்து அவர்களை விசாரணை அறைக்கு வரும்படி சொன்னார். அவர்களும் திகைக்காமல் வந்தனர். உதவி செய்கிறவர்கள் இல்லாதபடியால் தாமே அவர்களோடு பேசினார். அவர் அப்படிச் செய்தபடியால் இருவரும் இரட்சிக்கப்ட்டார்கள்.
என்னமாறுதல் / அந்தப் பிரஸ்பித்தீரியன் குரு திரும்பிப்போய் தன் ஊழியக் காலத்தில் செய்திராத காரியத்தைச் செய்ய ஆரம்பித்தார். ஜனங்களை ஆசிர்வாதம் கூறி அனுப்பிவிடாமல் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு ஒரு சமயம் கொடுத்தார். அவருடைய ஊழியம் முழுவதும் சீர்திருத்தமாயிற்று. சுவிசேஷப் பிரபல்யத்தின் சந்தோஷத்தைத் தன் அனுபவத்தில் அவர் அறிந்தார். ஒரு பிரஸ்பித்தீரியன் சபைப் போதகரும் அழைப்புக் கொடுக்க முடியும் என்பதை அனுபவத்தினால் அறிந்து கொண்டனர்.

என் நண்பனே, நீயும் போய் அப்படியே செய்யும்படி உனக்கு நான் ஆலோசனை கூறுகிறேன்.

8. தற்காலத்தின் தேவை


"தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப் போவார்கள்" (நீதி 29:18). இது சத்தியமான வார்த்தை. நாம் கடவுளின் சத்தத்தைக் கேளாதபடியினால் நமது பட்டணங்களிலுள்ள திரளான மக்கள் அழிந்து நாசமாகிறார்கள். நாம் நமது உத்தரவாதத்தை எப்போது உணரப்போகிறோம்?

நாம் நம்மிடம் வந்து சேர்ந்திருக்கும் கொஞ்ச ஜனங்களை நினைத்து திருப்தியடைவது சரியல்ல. நம்மைச் சுற்றியிருக்கும் திரளான ஜனங்களின் மேல் கவலைகொள்ளாமல், அவர்களைக் குறித்து எண்ணமற்றிருப்பது நியாயமா? நாமே அவர்களிடம் செல்லவேண்டும். அவர்கள் நம்மிடம் வரவேண்டுமென்று ஆண்டவர் கட்டளை கொடுக்கவில்லை. ஆகவே குற்றம் நம்மைச் சார்ந்ததேயொழிய அவர்களைச் சார்வதல்ல.

இவ்வுலகத்தார் எண்ணற்ற கவர்ச்சிகளினால் மக்கள் இழுத்துக் கொள்ளப்பார்க்கிறார்கள். சினிமாக்கொட்டகை, நாடக சாலை முதலியவைகள் பட்டணத்தின் முக்கிய இடங்களில் கட்டப்பட்டு வண்ண விலக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கண்ணைக் கவரத்தக்கதாக இருக்கின்றன. நாமோ நமது ஆலயங்களை ஒரு தெருவின் மூலை முடுக்கில் சிறிதாகக் கட்டி அழகில்லாமல் வைக்கிறோம்.

இப்படியிருக்க ஜனங்கள் நமது ஆலயத்திற்கு வருகிறதில்லை என்று நாம் குறை கூறுவது என்ன நியாயம்? "ஒளியின் பிள்ளைகளைப் பார்க்கிலும், இப்பிரபஞ்சத்தின் பிள்ளைகள் ஞானமுள்ளவர்களாயிருக்கிறார்கள்" என்ச் சத்திய வேதம் கூறுவது உண்மையே. ஆகவே ஒவ்வொரு பட்டணத்திலும் தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தைக் கூறும் இடங்கள் ஜனங்களை இழுக்கத்தக்க விதமாயும் எளிதில் வரக்கூடிய இடமாயும், வழியில் போகிறவர்களை இழுக்கத்தக்க அலங்காரமுடையதாயும் இருத்தல் வேண்டும். நாம் இப்படிப்பட்ட காரியங்களில் சிரத்தை எடுக்காமற் போவதினாலேயே புறமதஸ்தர் சீர்கெட்டுப் போகிறார்கள். இவைகளில் நாம் கரிசனை எடுப்பதற்கு நம்மிடம் விசுவாசமும் கடின உழைப்பும் தேவை கடவுளிடம் முழு விசுவாசம் வைத்து, நாமும் அவருக்கென நம்மைத் தியாகம் செய்வோமானால் எல்லாவற்றையும் நாம் செய்ய முடியும். "கடவுளிடமிருந்து பெரிய காரியங்களை எதிர்பாருங்கள். கடவுளுக்காகப் பெரிய‌ காரியங்களைச் செய்ய முயற்சியுங்கள்" என்பதே கேரி ஐயரின் குறிக்கோள் "விசுவாசிக்கிறவனால் எல்லாம் கூடும்" "தேவனால் எல்லாம் கூடும்" "தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள்" இவைகளே தேவனுடைய திருவாக்கு.

தற்கால சபைகளில் எங்கும் விசுவாசதுரோகம் காணப்படுகிறது. அநேகர் விசுவாசத்தை மறுதலித்து விழுந்து போயிருக்கிறார்கள். பட்டம் பெற்ற பல குருக்கள் ஆலயங்களில் நின்று செய்யும் பிரசங்கம் விசுவாச துரோகத்திற்கு ஏதுவாயிருக்கிறது. ஆகவே தேவனுடைய தாசர்கள் சீர்கெட்ட ஆத்துமாவை மாற்ற வல்லமையுள்ள சத்தியங்களைச் சத்தமிட்டுக் கூறவேண்டியது அவசியம் அல்லவா?

"இதோ, இருள் பூமியையும் காரிருள் ஜனங்களையும் மூடும் (ஏசாயா 60:2) என்று கூறியிருப்பது உண்மையே. கடவுளின் இரட்சிப்பைக் குறித்த விஷயத்தில் உலகத்திலுள்ள ஜனங்கள் முழுவதும் அந்தகாரத்திலேயே அமிழ்ந்து போயிருக்கிறார்கள் என்பது தெளிவு. சிற்சில ஆலயங்களில் மட்டும் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. மறு பிறப்பு, இரட்சிப்பு தெளிவாய்க் காட்டப்படுகிறது. ஜனங்கள் ஆண்டவரிடம் வரும்படி அழைப்புக் கொடுக்கப்படுகிறது. ஆனால் அனேக ஆலயங்களில் ஆராதனைகள் வழக்கம்போல் மாமூலாய் மட்டும் நடக்கிறது. சபையார் எல்லாரும் இரட்சிக்கப்பட்டவர்கள் என்றும், மோட்சம் போக தகுதியுள்ளவர்கள் என்றும் கருதியே பிரசங்கம் செய்யப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு சபையிலும் மறுபிறப்பு அடையாதவர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் அறிந்து சுவிசேஷத்தை எங்கும் பிரசங்கிக்க வேண்டும்.

பன்யன், பேக்ஸ்டர், ஐலீன், எட்வர்ட், வெஸ்லி, ஒய்ட் பீல்டு, பின்னி முதலியவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கையில், பாவிகள் தங்கள் பாவபாரத்தை உணர்ந்து, நடுங்கிச் சத்தமிட்டனர். கர்த்தர் இப்படிப்பட்ட பிரசங்கிமார்களை நம் மத்தியில் எழுப்புவாராக. இந்தக் கடைசி காலத்தில், பிரசங்கிமார் மற்ற விஷயங்களைக் குறித்துப் பேசுவதைப் பார்க்கிலும், சத்திய வேதத்திலுள்ள மிகவும் முக்கியமும் அவசியமுமான சத்தியங்க்களையே பயமின்றிக் கூறி அறிவிப்பார்களாக. கடவுளின் சுவிசேஷமே இக்காலத்திற்கு இன்றியமையாதத் தேவை.

மிகுதியான நேரம் மூல உபதேசங்களைப் பற்றிய வாக்கு வாதங்களில் செலவழிக்கப்படுகின்றன. தர்க்கங்களால் பயன் ஒன்றும் இல்லை. சத்திய வேதக் கொள்கைகளை நாம் பாதுக்காக்க வேண்டிய அவசியம் இல்லை. அவைகளைக் கூறி அறிவிக்க வேண்டியதே நமது காரியம். சத்திய வேதம் தன்னைத் தானே பாதுகாத்துக்கொள்ளும். அதை எதிர்க்கிறவர்கள் சீக்கிரம் மரித்துப் போவார்கள்; ஆனால் அதுவோ நிச்சயமாய் நிலைத்திருக்கும். வட ஆப்பிரிக்காவில் மார்க்கபேத தர்க்கத்தால் சுவிசேஷ ஒளி அணைந்து போனது. நாம் நம் முறைகளை மாற்றி அமைக்காத பட்சத்தில் நம் தேசத்திலும் அவ்வாறே நடைபெறும்.

நாம் அனைவரும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் ஒரே நோக்கத்தில் ஐக்கியப்பட்டு, ஆவியின் ஒருமைப்பாட்டில் சுவிசேஷத்தை உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் பிரசங்கிப்போமாக இரட்சிப்புக்கு சுவிசேஷமே தேவபெலனாயிருக்கிறதென்று நாமெல்லாரும் விசுவாசிக்கிறோம். அப்படியானால் அந்தச் சுவிசேஷத்தையே நாம் அறிவிப்போமாக. நாஸ்தீகர் தர்க்கங்களினால் உணர்ச்சியடையமாட்டார்கள்.

சத்திய வேதத்தில் கூறியிருக்கிறபடி நாம் லவோதிக்கேயா சபையின் காலத்திலிருக்கிறோம். ஆக, நமது சபைகளுக்கே சுவிசேஷம் அதிகம் தேவை. உலகத்தை விட்டுப்பிரிந்து இயேசுநாதரிடம் முழுமனதோடு பக்தி வைக்கவேண்டும் என்று நமது சபைகளுக்குப் புத்தி சொல்ல வேண்டும். உலகத்தோடு ஒத்து நடக்கும் ஒரு சபையில் உண்மையாய் மறுபிறப்படைந்த ஒரு மனிதன் தரித்திருக்கக்கூடுமா? சமரசம்பண்ணுதலைத் தேவனுடைய வசனம் கண்டனம் செய்கிறது. அந்தகாரம் அகற்றப்படவேண்டும் ஐக்கியத்தால் விசுவாச துரோக்கத்தை எதிர்க்க வேண்டும்.

சத்துரு நம்மேல் பாய்கிறான். புயல் காற்று அடிக்க ஆயத்தமாயிருக்கிறது. பரிசுத்தாவியானவரின் பலத்தைக்கொண்டு சுவிசேஷத்தை அறிவிப்பதினாலேயே, எதிர்த்து வரும் அலைகளை அமர்த்த முடியும். நாம் ஜனங்களிடம் சென்று சுவிசேஷப் பாட்டுகளைப்பாடி, நல்ல சாட்சி கூறி கிறிஸ்துவின் நற்செய்தி கூறி, கிறிஸ்துவற்ற கூட்டத்தினரை நமது பக்கமாக இழுத்துக் கொள்வோமாக, நாம் ஒரு தெளிவான நல்ல சுவிசேஷ ஒழுங்கைக் கையாடி, ஆத்துமாக்களை ஆண்டவரிடம் வரும்படி ஆதாயம் செய்வோமாக.

நீங்கள் எப்போதாவது நீதி 24:11, 12 ஐ வாசித்திருக்கிறீர்களா? "மரணத்திற்கு ஒப்பிக்கப் பட்டவர்களையும் கொலையுண்ணப் போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி. அதை அறியோம். என்பாயாகில், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ? உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ? அவர் மனுஷனுக்கு அவனவன் கிரியைக்குத் தக்கதாக பலனளியாரே?"

இச்செய்தியை வாசித்து யார் உணர்வடையாமல் இருக்க முடியும்? இது அத்தனை முக்கிய செய்தியல்லவா? மனிதர்களுக்கு வரும் ஆபத்தை நாம் அறிந்தும், அதை அவர்களுக்கு கூறி அறிவிக்காவிடில் அக்குற்றம் நம்மைச் சார்ந்ததே. நமக்கு தெரியாது எனச் சொல்லுவதில் பயன் இல்லை. இவ்விதச் சாக்குப்போக்கைக் கடவுள் ஏற்றுக் கொள்ளார். நாம் சத்தமிட்டுகூறி அறிவிக்க வேண்டும். அவர்களுக்கு வரும் ஆபத்தைத் தெரிவிக்க வேண்டும். அப்படி நாம் செய்யாதுபோனால் அவர்கள் இரத்தப்பழி நம் மேல் சுமரும்.

என் சகோதரரே, இதுவே இச்சமயத்தில் நாம் செய்ய வேண்டிய ஊழியம். ஜனங்கள் அழிந்து போவதற்கு நாம் உத்திரவாதிகளாகாதபடி கர்த்தர்தாமே இவ்விஷயத்தில் நம்மெல்லாருக்கும் தெளிந்த புத்தியையும் பிரகாசமான மனக்கண்களையும் தந்தருளுவாராக.

7. அந்நிய‌நாட்டு மிஷ‌னெரி ஊழிய‌த்திற்காக‌ நாம் ஏன் ப‌ண‌ச் ச‌காய‌ம் செய்ய‌வேண்டும்?




"வாரியிறைத்தும் விருத்திய‌டைவாரும் உண்டு; அதிக‌மாய்ப் பிசினித்த‌ன‌ம் ப‌ண்ணியும் வ‌றுமைய‌டைவாரும் உண்டு. உதார‌ குண‌முள்ள‌ ஆத்துமா செழிக்கும்: எவ‌ன் த‌ண்ணீர் பாய்ச்சுகிறானோ அவ‌னுக்குத் த‌ண்ணீர் பாய்ச்ச‌ப்ப‌டும்" (நீதி 11: 25, 26). இவ்வேத‌ வ‌ச‌ன‌ங்க‌ள் உண்மையுள்ள‌வைக‌ளே. த‌ங்க‌ள் தால‌ந்தை உப‌யோகித்த‌ ம‌க்க‌ள் இரும‌ட‌ங்கு திரும்ப‌ப் பெற்றார்க‌ள். ஆனால் அதைப் புதைத்து வைத்த‌வ‌னோ உள்ள‌தையும் இழ‌ந்து போனான் அல்ல‌வா?

"உள்நாட்டு வேலைக‌ள் அதிக‌ம் இருக்க‌, ஏன் அய‌ல் நாட்டுக்குப் ப‌ண‌ம் அனுப்ப‌வேண்டும்" என‌க் கேட்கிற‌வ‌ர்க‌ள் உண்டு. இக்கேள்விக்குப் ப‌தில்க‌ளை ஒவ்வொன்றாக‌க் கூறுகிறேன். ஜெப‌ சிந்தையுட‌ன் அவைக‌ளை யோசித்துப் பாருங்க‌ள்.

அய‌ல்நாட்டு ஊழிய‌ஞ் செய்யும் ச‌பைக‌ள் விருத்திய‌டைகின்ற‌ன‌:

தூர‌த்தில் பிர‌காசிக்கிற‌ விள‌க்கு. ப‌க்க‌த்தில் அதிக‌ம் பிர‌காசிக்கும். அய‌ல் நாட்டாரின் இர‌ட்சிப்புக்காக‌ க‌வ‌லைப்ப‌டுவோர் உள் நாட்டாருக்காக‌வும் அக்க‌றை எடுப்பார்க‌ள். நான் ப‌ல‌ஸ்தீனாவிலிருந்த‌போது ப‌ல‌ இட‌ங்க‌ள் சென்றேன். ச‌வ‌க்க‌ட‌லிலும், க‌லியேயாக் க‌ட‌லிலும் நீந்தி ஸ்நான‌ம் செய்தேன். இரு க‌ட‌ல்க‌ளுக்கும் உள்ள‌ வித்தியாச‌த்தைக் க‌ண்டேன். ச‌வ‌க்க‌ட‌ல் ஒரு துளி நீரையும் வெளிவிடாம‌ல் எப்போதும் வாங்கிக் கொண்டேயிருக்கிற‌ப‌டியால் அத‌ன் த‌ண்ணீர் க‌ட்டுக் க‌டையாய்க் கிட‌க்கிற‌து. அதில் ஜீவ‌ராசிக‌ள் ஒன்றுமே இல்லை. க‌லிலேயாக் க‌ட‌லோ, த‌ண்ணீரைப் பெற்றும் கொடுத்தும் கொண்டேயிருக்கிற‌து. இத‌ன் த‌ண்ணீர் தெளிவாக‌வும் சுத்த‌மாக‌வும் இருந்த‌து. மேலும் அநேக‌ ஜீவ‌ ஜ‌ந்துக்க‌ள் அதில் வ‌சிக்கின்ற‌ன‌.
அய‌ல் நாடுக‌ளில் ஊழிய‌ஞ் செய்யும் ச‌பைக்கும், அவ்வூழிய‌த்தில் சிர‌த்தை எடுக்காத‌ ச‌பைக்குமுள்ள‌ வித்தியாச‌த்தைக் காட்டும் ச‌ரியான‌ திருஷ்டாந்த‌ம் இதுவே. பிந்தின் ச‌பை வ‌ருமான‌ங்க‌ளையெல்லாம் த‌ன‌க்காக‌வே உப‌யோகிக்கிற‌து. ஒருபொழுதும் அது வெளியே கொடுக்கிற‌தில்லை. ஆக‌வே ச‌பைக்குள்ளே ப‌ல‌வ‌கை அசுத்த‌ங்க‌ளாகிய‌ குறை கூறுத‌ல், வீண் பேச்சு, குற்ற‌ம் பிடித்த‌ல், பிரிவினைக‌ள், ச‌ண்டைக‌ள் முத‌லான‌வைக‌ள் காண‌ப்ப‌டுகின்ற‌ன‌. மிஷ‌னெரி ச‌பையோ வாங்க‌வும் கொடுக்க‌வும் செய்கிற‌து. ஆக‌வே அது உயிருள்ள‌தாயும், ஆசீர்வாத‌ம் நிறைந்த‌தாயுமிருக்கிற‌து. த‌னித்த‌ ஆள் விஷ‌ய‌த்திலும் இந்த‌த் திருஷ்டாந்த‌ம் உண்மையாயிருக்கிற‌து. த‌ன‌க்கென்றே எல்லாவ‌ற்றையும் வைத்துக்கொண்டு, பிற‌ருக்குக் கொடுக்க‌ ம‌றுக்கிற‌வ‌ன் க‌ட்டுக்க‌டைத் த‌ண்ணீராகிய‌ ச‌வ‌க்க‌ட‌லைப் போலிருக்கிறான். அவ‌னால் ஒருவ‌ருக்கும் ஆசீர்வாத‌மில்லை. அந்நிய‌ நாட்டு மிஷ‌னெரி ஊழிய‌த்திற்காக‌ மூல‌த‌ன‌ம் வைக்கிற‌வ‌ன் ப‌ரிபூர‌ண‌ ஜீவ‌னையுடைய‌வ‌னாகியிருக்கிறான். உன் ஜீவிய‌ம் எக்க‌ட‌லைப் போலிருக்கிற‌து? சோதித்த‌றிவோமாக‌.

நீங்க‌ள் பொக்கிஷ‌த்தை எங்கே சேர்த்து வைக்கிறீர்க‌ள்?

நீங்க‌ள் ப‌ர‌லோக‌த்திலாவ‌து, பூலோக‌த்திலாவ‌து பொக்கிஷ‌த்தைச் சேர்த்து வைக்கிறீர்க‌ள். "பூமியிலே உங்க‌ளுக்குப் பொக்கிஷ‌த்தைச் சேர்த்து வைக்க‌வேண்டாம்; இங்கே பூசியும் துருவும் அவைக‌ளைக் கெடுக்கும்; இங்கே திருட‌ரும் க‌ன்ன‌மிட்டுத் திருடுவார்க‌ள். ப‌ர‌லோக‌த்திலே உங்க‌ளுக்குப் பொக்கிஷ‌ங்க‌ளைச் சேர்த்து வையுங்க‌ள்; அங்கே பூச்சியாவ‌து துருவாவ‌து கெடுக்கிற‌தும் இல்லை; அங்கே திருட‌ர் க‌ன்ன‌மிட்டுத் திருடுகிற‌தும் இல்லை" (ம‌த் 6: 9, 20) என்று க‌ட‌வுள் உரைக்கிறார். உங்க‌ளுக்குள்ள‌வைக‌ள் யாவையும் நீங்க‌ள் இழ‌க்க‌வேண்டி வ‌ரும். ஆத்தும‌ ஆதாய‌த்தில் நீங்க‌ள் செல‌விட்ட‌ ப‌ண‌மெல்லாம் நீங்க‌ள் சேமித்து வைத்த‌ ப‌ண‌மாகும். ஒன்று நீங்க‌ள் த‌ரித்திர‌ராக‌, அல்ல‌து சேமிப்பைப் பெரும் சுத‌ந்த‌ர‌ராக‌ப் ப‌ர‌லோக‌த்தில் போய்ச் சேருவீர்க‌ள்.

ந‌ம்மில் சில‌ர் வ‌ய‌து சென்ற‌வ‌ர்க‌ளாயிருக்கிறோம். நாம் ப‌ர‌லோக‌த்தில் பொக்கிஷ‌த்தைச் சேர்ப்ப‌த‌ற்கு இன்னும் கொஞ்ச‌ கால‌மே உண்டு. நாம் இப்போதே தொட‌ங்க‌ வேண்டும். இல்லையேல் கால‌ம் க‌ட‌ந்துவிடும். முன்பு நாம் அனுப்பின‌வைக‌ள் யாவும் சேமிப்பாக‌ வைக்க‌ப்ப‌ட்டிருக்கும். ம‌றுமையில் நாம் அவைக‌ளைவ‌ட்டியுட‌ன் பெற்றுக்கொள்வோம்.

நீங்க‌ள் உங்க‌ள் அன்பை நிரூபித்துக் காட்ட‌வேண்டும்.

நீங்க‌ள் இயேசுநாத‌ரில் அன்பு கூருகிற‌வ‌ர்க‌ளானால், அதை உங்க‌ள் செய்கையால் காட்ட‌வேண்டும். தியாக‌மே அன்பு. அன்பு கிரியையில் வெளிப்ப‌டும். நான் ஆண்ட‌வ‌ரை நேசிக்கிறேன் என‌ச் சொல்வ‌து போதாது. நீங்க‌ள் சேர்த்து வைக்கும் பொக்கிஷ‌த்தினால், ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்காக‌ நீங்க‌ள் செய்யும் தியாக‌த்தினால், புற‌ம‌தஸ்த‌ருக்குச் சுவிசேஷ‌த்தை அறிவிக்க‌ நீங்க‌ள் எடுக்கும் முய‌ற்சியினால் அதை ரூபித்துக் காட்ட‌வேண்டும். கிரியை இல்லாத‌ விசுவாச‌ம் செத்த‌துபோல‌ கிரியை இல்லாத‌ அன்பும் செத்த‌து. நீங்க‌ள் ஆண்ட‌வ‌ரில் அன்புகூருகிறீர்க‌ளானால், அவ‌ரை அறியாத‌வ‌ர்க‌ளும் அவ‌ர‌ண்டை வ‌ர‌த்த‌க்க‌தாக‌ நீங்க‌ள் பெற்றிருக்கும் ந‌ன்மைக‌ளைப் ப‌கிர்ந்து கொடுக்க‌வேண்டும்.

செழிப்புக்கு க‌ட‌வுளின் இர‌க‌சிய‌ம்

ப‌ண்டித‌ர் ப‌வுல் ரீஸ் என்ப‌வ‌ர் போத‌க‌ராயிருந்த‌ மின்னியாபோலிஸ் ப‌ட்ட‌ண‌‌த்திலுள்ள‌ ஆல‌ய‌த்தில் நான் ஆவிக்குரிய‌ கூட்ட‌ங்க‌ள் ந‌ட‌த்திக் கொண்டிருந்தேன். ஒரு நாள் ஆராத‌னை முடிந்த‌வுட‌ன் ந‌ன்றாய் உடுத்தியிருந்த‌ ஒரு வியாபாரி பிர‌ச‌ங்க‌ பீட‌த்த‌ண்டை வ‌ந்து என்னுட‌ன் கை குலுக்கினார். அவ‌ர் யாரென‌ என‌க்குத் தெரியாது. அவ‌ர் என்னை நோக்கி "சிமித் ப‌ண்டித‌ரே, என‌க்குரிய‌தெல்லாம் உங்க‌ள் மூல‌யாய்த்தான் கிடைத்த‌து," என்றார். விய‌ப்புட‌ன் அவ‌ரை நான் பார்த்தேன். அப்போது அவ‌ர் த‌ன்னுடைய‌ ச‌ரிதையை என‌க்குச் சொன்னார். அது வ‌ருமாறு: "நான் த‌ரித்திர‌னாயிருந்தேன், என் வேலையை இழ‌ந்தேன்; என் ம‌னைவியும் இர‌ண்டு பெண் குழ்ந்தைக‌ளோடு என்னை விட்டுப் பிரிந்து விட்டாள். க‌ந்தையைக் க‌ட்டியிருந்தேன். நீங்க‌ள் உங்கள் ஆல‌ய‌த்தில் மிஷ‌னெரிக்கூட்ட‌ங்க‌ள் ந‌ட‌த்துகையில் ஒருநாள் நான் அங்குவ‌ந்தேன். நீங்க‌ள் பேசிக்கொண்டிருக்கையில், நான் என் வாழ்க்கையில் கேள்விப்ப‌டாத‌ ஒரு ச‌த்திய‌த்தைச் சொன்னீர்க‌ள். அதாவ‌து ஈகையில் நீங்க‌ள் க‌ட‌வுளுக்கு முந்திக்கொள்ள‌ முடியாது, கொடுங்க‌ள், அப்பொழுது உங்க‌ளுக்குக் கொடுக்க‌ப்ப‌டும் நீங்க‌ள் க‌ட‌வுளிட‌ம் நேர்மையாய் ந‌ட‌ந்துக் கொண்டால் அவ‌ர் உங்க‌ளிட‌ம் நேர்மையாய் ந‌ட‌ந்துகொள்வார் என்ப‌தே நான் நிமிர்ந்து க‌வ‌னித்துக் கொண்டிருந்தேன். உங்க‌ள் வார்த்தையின் உண்மையைப் ப‌ரிசோதித்த‌றியும்ப‌டி நீங்க‌ள் கொடுத்த‌ அட்டையில் நூற்றுக்கு இத்த‌னை வீத‌ம் நான் கொடுப்பேன் என்று எழ்ஹுதினேன் என் கையில் ப‌ண‌ம் இல்லாத‌தால் அப‌டி எழுதுவ‌து இலேசு. அதிச‌ய‌த்த‌‌க்க‌ வித‌மாய் சில‌ நேர‌த்திற்குள் என‌க்கு ஒரு வேலை கிடைத்த‌து. முத‌ல் ச‌ம்ப‌ள‌ம் கிடைத்த‌வுட‌ன் நான் வாக்குப்ப‌ண்ணின‌ தொகையை அனுப்பி வைத்தேன். விரைவில் என் ச‌ம்ப‌ள‌ம் உய‌ர்ந்த‌து. நான் என் ச‌ந்தாவையும் கூட்டிக் கொடுத்தேன். பின்பு புதுக்கால்ச‌ட்டையும், மேல் ச‌ட்டையும் வாங்கினேன். அப்புற‌ம் ஒரு ந‌ல்ல‌ வேலையும் என‌க்குக் கிடைத்த‌து உட‌னே என் ம‌னைவி ம‌க்க‌ளும் என்னிட‌ம் திரும்பி வ‌ந்தார்க‌ள். நான் கொடுத்துக்கொண்டேயிருந்தேன். சீக்கிர‌ம் என் க‌ட‌ன்க‌‌ளெல்லாம் தீர்ந்தது. இப்போதோ இங்கே என‌க்குச் சொந்த‌ வீடும் இருக்கிற‌து; சேமிப்பு நிதியிலும் ப‌ண‌ம் இருக்கிற‌து. இவை எல்லாவ‌ற்றிலும் நான் உங்க‌ளுக்குக் க‌ட‌ன் ப‌ட்ட‌வனே; நீங்க‌ள் சொன்ன‌து உண்மையென‌ நான் க‌ண்டேன். க‌ட‌வுள் தாம் சொன்ன‌ப‌டியே செய்கிற‌வ‌ர் என்ப‌தையும், நான் என் அனுப‌வ‌த்தில் க‌ண்டுகொண்டேன்" என‌ ம‌கிழ்ச்சியுட‌ன் கூறினார்.

என் ந‌ண்ப‌னே, செழிப்புக்குக் கார‌ண‌மாயிருக்கும் க்ட‌வுளின் இர‌க‌சிய‌த்தை நீயும் அறிய‌ விரும்புகிறாயா? க‌ட‌வுள் ஒருவ‌னுக்கும் க‌ட‌னாளியாயிருக்க‌மாட்டார். என் ஆல‌ய‌ அலுவ‌ல‌க‌த்திற்கு அநேக‌ர் உத‌வி தேடி வ‌ந்த‌துண்டு. ப‌ல‌முறை அவ‌ர்க‌ளிட‌ம் நான் கேள்வி கேட்ட‌தும் உண்டு. த‌ங்க‌ள் வாழ்நாள்க‌ளில் க‌ட‌வுளுக்கு நேர்மையாய் ந‌ட‌ந்து கொண்டோம் என‌ ஒருவ‌ரும் கூற‌முடியாத‌வ‌ர்க‌ளாய்க் காண‌ப்ப‌ட்டார்க‌ள். த‌ம்மை நினைக்கிற‌வ‌ர்க‌ளைக் க‌ட‌வுளும் ம‌ற‌வார், "என்னைக் க‌ன‌ம் ப‌ண்ணுகிற‌வ‌ர்க‌ளை நானும் க‌ன‌ம் ப‌ண்ணுவேன்" என்று சொல்லியிருக்கிறார். உங்க‌ள் ஜீவிய‌ நாள்க‌ளில் க‌ட‌வுளிட‌ம் நேர்மையாய் ந‌ட‌ந்து கொள்ளுங்க‌ள். இல்லாவிடில் நீங்க‌ளும் அப்ப‌த்துக்காக‌ இர‌ந்து கெஞ்ச‌வேண்டி வ‌ரும். அந்நிய‌ நாட்டு மிஷ‌ன் ஊழிய‌த்திற்காக‌ ஒழுங்காய்க் கொடுப்ப‌தே க‌ட‌வுளுக்குக் கொடுக்கும் சிற‌ந்த‌ முறை என‌ நான் அற்ந்திருக்கிறேன். இதைவிட‌ மேலான‌ முறை வேறொன்றுமில்லை.

ப‌ண‌த்தை உப‌யோகிக்க‌வேண்டும்

ப‌ண‌ம் தன்னில்தான் பிர‌யோஜ‌ன‌ம்‌ உள்ள‌தா? அல்ல‌து அதை உப‌யோகிக்கிற‌தே பிர‌யோஜ‌ன‌மா? கிறிஸ்தவ‌ர்க‌ள் ப‌ண‌த்தைத் தேடிக் குவித்து வைக்காம‌ல் அதைக் க‌ட‌வுளின் இராஜ்ய‌ அபிவிருத்திக்காக‌வே செல‌வு செய்த‌ல்வேண்டும். நான் ஒரு தொழில் செய்கிற‌வ‌னாயிருந்து திர‌ளாய்ப் ப‌ண‌ம் ச‌ம்பாதித்தால், என‌க்கும் என் குடும்ப‌த்திற்கும் போக‌ மீதியைக் கொண்டு சீனாவுக்கு ஒரு மிஷ‌னெரியை அனுப்பி அவ‌ரைப் போஷிப்பேன் இன்னும் அதிக‌ ப‌ண‌ம் கிடைத்தால், ஒரு மிஷ‌னெரியை ஆப்பிரிக்காவுக்கும், ம‌ற்றொருவ‌ரை இந்தியாவுக்கும் அனுப்பி உத‌வி செய்வேன். ப‌ண‌த்தின் மூல‌ம் சுவிசேஷ‌ செய்தியைப் ப‌ர‌ப்புவேன். இவ்வ‌கையாய்க் க‌ட‌வுளின் திட்ட‌ப்ப‌டி உல‌க‌ முழுவ‌திலும் சுவிசேஷ‌த்தைப் பிர‌ச‌ங்கிப்ப‌தில் நான் என் ப‌ண‌த்தைச் செல‌விடுவேன். பின்பு அவ‌ருடைய‌ நிறைவான‌ ஆசீர்வாத‌த்தை நான் எதிர்பார்ப்பேன். சிநேகித‌னே, நீர் உம‌க்காக‌வா அல்ல‌து க‌ட‌வுளின் ஊழிய‌த்திற்காக‌வா ப‌ண‌த்தைத் தேடுகிறீர்? அத‌னால் உம‌க்கு என்ன‌ ப‌ல‌ன் கிடைக்கும்?

ம‌ர‌ண‌ சாச‌ன‌ம்

அநேக‌ர் த‌ங்க‌ள் சொத்தை ம‌ர‌ண‌ சாச‌ன‌ம் எழுதி மிஷ‌னுக்குக் கொடுத்து புண்ணிய‌ம் பெற‌ நினைக்கிறார்க‌ள். தாங்க‌ள் ம‌ர்த்த‌பின் த‌ங்க‌ள் ஆஸ்தியைக் க‌ர்த்த‌ருக்குக் கொடுக்கிற‌வ‌ர்க‌ளுக்கு அவ‌ர் எவ்வித‌ வெகும‌தியையும் வாக்குப்ப‌ண்ண‌வில்லை. "அவ‌ன‌வன் த‌ன் த‌ன் ச‌ரீர‌த்திலே செய்த‌ கிரியைக‌ளுக்குத் த‌க்க‌ ப‌ல‌னை அடைவான்" என்றே 2 கொரி 5: 10 கூறுகிற‌து. நான் உயிரோடிருக்கும்போது செய்த‌ கிரியைக‌ளுக்குத்த‌க்க‌ ப‌ல‌ன் அளிக்க‌ப்ப‌டும் என்ப‌தே அத‌ன் பொருள்.

என் ப‌ண‌த்தின் மூல‌மாய் என்ன‌ நட‌க்கிற‌தென்று நான் அ‌றிய‌ விரும்புகிறேன். என‌க்கு விருப்ப‌மான‌ காரிய‌த்திற்காக‌ என் ப‌ண்ம‌ செல‌வு செய்ய‌ப்ப‌டுகிற‌து என்ற‌ நிச்ச‌ய‌ம் என‌க்கு வேண்டும். நான் உயிரோடிருக்கும‌ட்டும் வ‌ருடாவ‌ருட‌ம் அதைக் கொடுத்துக்கொண்டேயிருக்க‌வேண்டும். இல்லாவிடில் என் ப‌ண‌த்தினால் என‌க்கு யாதொரு பிர‌யோஜ‌ன‌மும் இல்லை.

தியாக‌ம் என்றால் என்ன‌?

தியாக‌த்தின் அர்த்த‌ம் உன‌க்குத் தெரியுமா? ஒரு சிறுமியின் தியாக‌த்தைக் கேளுங்க‌ள். அவ‌ள் பேர் கிரேஸ். த‌ன் 20 வ‌ய‌தில் ஜெயில் ப‌ட்ட‌ண‌த்திலுள்ள‌ பிர‌ஸ்பித்த‌ரின் ச‌பையில் குண‌ப்ப‌ட்டாள். அவ‌ளுக்கு இந்தியாவின்மேல் மிக‌ப் ப‌ற்று ஒருநாள் அவ‌ளுடைய‌ தாய் அவ‌ளைப் பார்த்து, "ம‌க‌ளே, நான் உன‌க்கு ஒரு புது மேல் ச‌ட்டை வாங்க‌ப் போகிறேன்" என்றாள். அவ‌ள் உப‌யோகித்து வ‌ரும் ச‌ட்டை 6 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் வாங்கின‌தும் கிழிந்த‌துமாயிருந்த‌து. ஆனாலும் கிரேஸ் த‌ன் தாயைப் பார்த்து, "அம்மா, நீங்க‌ள் த‌ய‌வு செய்து அந்த‌ப் ப‌ண‌த்தை என்னிட‌ம் கொடுங்க‌ள். நான் அந்த‌ப் ப‌ழைய‌ ச‌ட்டையை இன்னும் ஒரு வ‌ருட‌ம் போட்டுக் கொள்வேன்" என்றாள். அப்ப‌டியே அப்ப‌ண‌த்தைத் தாய் அவ‌ளிட‌ம் கொடுத்தாள். கிரேஸ் அதை வாங்கி இந்தியாவிலுள்ள‌ மிஷ‌னெரிமார்க‌ளுக்கு அனுப்பி வைத்தாள்.

நான் டெயில் ப‌ட்ட‌ண‌த்தை விட்டு வ‌ருமுன் கிரேஸ் வியாதிப்ப‌ட்டாள். ம‌ர‌ண‌ப்ப‌டுக்கையில் அவ‌ள், த‌ன் துணி ம‌ணிக‌ளையெல்லாம் விற்று, கிடைக்கும் ப‌ண‌த்தை இந்தியாவுக்கு அனுப்ப‌வேண்டுமென்ற‌ வாக்குறுதியைத் த‌ன் தாயிட‌ம் கேட்டாள், தாய் க‌ண்ணீரோடு அவ்வித‌மே செய்வேன் என்றாள் கிரேஸ் த‌ன் வெகும‌தியைப் பெரும் ச‌ம‌ய‌ம் நான் ஆண்ட‌வ‌ர்ன் சிங்காச‌ன‌த்தின் அருகே நிற்க‌ ஆசைப்ப‌டுகிறேன். அவ‌ளுடைய‌ இருத‌ய‌ம் இந்தியாவிலிருந்த‌ப‌டியால் அவ‌ளுடைய‌ ப‌ண‌மும் அங்கே சென்ற‌து. என் சிநேகித‌னே இவ்வித‌மான‌ தியாக‌த்தை நீயும் செய்ய‌ ஆய‌த்த‌மா?

என் முத‌ல் விசுவாச‌ வாக்கு

என் முத‌ல் விசுவாச‌ வாக்கை நான் ஒருபொழுதும் ம‌ற‌க்க‌மாட்டேன். நான் டொரான்டோவிலுள்ள‌ ஓர் ஆல‌ய‌த்தில் போத‌க‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்டேன். அச்ச‌ம‌ய‌ம் மிஷ‌னெரி மகாநாடு ந‌ட‌ந்துகொண்டிருந்த‌து. நான் மேடையில் அம‌ர்ந்திருக்கையில், வாக்குறுதிக் காணிக்கை வாங்க‌ ஆர‌ம்பித்த‌ன‌ர். என் கையில் கொடுத்த‌ அட்டையை வாசித்தேன் அதில் "நான் க‌ர்த்த‌ரைச் சார்ந்து மிஷ‌னெரி ஊழிய‌த்திற்காக‌....(இவ்வ‌ள‌வு ப‌ண‌ம்) கொடுக்க‌ப் பிர‌யாச‌ப்ப‌டுவேன்" என்று எழுதியிருந்த‌து. அப்பொழுது நான் க‌ர்த்த‌ரை நோக்கி "க‌ர்த்தாவே, நான் ஒன்றும் கொடுக்க‌ முடியாது. நான் வார‌த்திற்கு, சுமார் 100 ரூபாய் ம‌ட்டும் ச‌ம்பாதிக்கிறேன். என‌க்கு ஒரு ம‌னைவியும் ஒரு பிள்ளையும் இருக்கிறார்க‌ள். யுத்த‌மும் ந‌ட‌ந்து கொண்டிருக்கிற‌து விலைவாசியும் வான‌ள‌வாய் உய‌ர்ந்திருக்கிற‌து. வார‌க் க‌டைசியில் என் பையில் இர‌ண்டு காசுகூட‌ மீதி இல்லை. இப்ப‌டியிருக்க‌ நான் எப்ப‌டி உம‌க்குக் கொடுக்க‌க்கூடும்?" என‌ ஜெபித்தேன்.
நான் இத‌ற்குமுன் ஒழுங்கான‌ முறையில் கொடுத்த‌தில்லை. 5 அல்ல‌து 10 ரூபாய் ம‌ட்டும் ரொக்க‌க் காணிக்கையாக‌க் கொடுப்பேன். சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் மிஷ‌னெரி ஊழிய‌த்திற்காக‌ ரூ. 20 கொடுத்த‌துண்டு. ஆனால் விசுவாச‌ வாக்குக் கொடுப்ப‌தும், வாரா வார‌ம் ஒழுங்காய்க் கொடுப்ப‌தும் என‌க்கு நூத‌ன‌மாயிருந்த‌து.

நான் ஒரு போத‌க‌ராயிருந்த‌ப‌டியால் முன் மாதிரி காட்ட‌வேண்டிய‌வ‌னாயிருந்தேன். உட‌னே நான் க‌ர்த்த‌ரை நோக்கி, "க‌ர்த்தாவே என்னிட‌ம் கொடுக்க‌ ஒன்றும் இல்லை. நான் என்ன‌ செய்வேன்?" என்றேன். க‌ர்த்த‌ர்: "உன்னிட‌ம் என்ன‌ இருக்கிற‌து என்று நான் கேட்க‌வில்லை. நான் உன்னை விசுவாச‌ வாக்கு கொடுக்கும்ப‌டி கேட்கிறேன். நீ எவ்வ‌ள‌வு ப‌ண‌த்திற்கு என்மேல் ந‌ம்பிக்கை வைக்க‌ முடியும்?" என்றார். அவ‌ர் கேட்ட‌து என‌க்கு உட‌னே விள‌ங்கிய‌து.
ஒருவேளை ரூ. 20 அல்ல‌து ரூ. 40க்கு நான் க‌ர்த்த‌ர் பேரில் ந‌ம்பிக்கை வைக்க‌லாம் என்று என‌க்குள் எண்ணீனேன். திடீரென‌ அவ‌ர் என்னுடன் திரும்ப‌வும் பேச‌ ஆர‌ம்பித்தார். "ரூ. 200" என்று சொன்னார். நான் அதிர்ச்சிய‌டைந்தேன். ரூ. 200க்கா என‌ ஆச்ச‌ரிய‌த்துட‌ன் சொன்னேன். யாரும் ரூ 200 ச‌ந்தா கொடுக்கிற‌தை நான் கேட்ட‌தில்லை. நான் எப்ப‌டி ரூ 200 கொடுக்க‌ முடியும்? எவ்வாறு நான் சிந்தித்து ந‌டுக்க‌த்துட‌ன் அட்டையில் ரூ 200 என‌ எழுதிக் கொடுத்தேன்.

என‌க்கிருந்த‌ ச‌ந்தோஷ‌த்திற்கு ஓர் அள‌வில்லை. அந்த‌ப் ப‌ண‌த்திற்காக‌ நான் மாதாமாத‌ம் ஜெபித்தேன். நான் எவ்வித‌மாய்ப் பெற்றேன் என்ப‌து என‌க்கே தெரியாது. க‌ட‌வுள் அப்ப‌ண‌த்தை அனுப்பினார். நான் வ‌ருட‌ முடிவுக்குள்ளாக‌ அந்த‌ ரூ 200 முழுவ‌தையும் செலுத்தினேன். அவ‌ர் என‌க்க‌ளித்த‌ ஆசீர்வாத‌ம் அத்த‌னை அதிக‌மாயிருந்த‌ப‌டியால் வ‌ருடா வ‌ருட‌ம் நான் அந்த‌த் தொகையை இர‌ட்டிப்பால்க் கொடுத்து வ‌ந்தேன். மூன்று வ‌ருட‌ம் தொட‌ர்ச்சியாய் இர‌ட்டிப்பாய்க் கொடுத்து அத‌ற்குரிய‌ ச‌ந்தோஷ‌த்தை அனுப‌வித்தேன். க‌ட‌வுள் என்னை ஆசீர்வ‌தித்தப‌டியால் நான் க‌ட‌ந்த‌ 30 வ‌ருட‌ங்க‌ளாக‌, ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ரூபாய்க‌ளை நிலைவ‌ர‌மாக‌வும், ஒழுங்காக‌வும் கொடுக்க‌ ஆண்ட‌வ‌ர் என‌க்குப் பெல‌ன‌ளித்து வ‌ருகிறார்.

நான் செய்து நிறைவேற்றி வ‌ருவ‌தையே நீங்க‌ளும் செய்யும்ப‌டி நான் உங்க‌ளை வேண்டுகிறேன். ஈகையின் ச‌ந்தோஷ‌த்தை நான் அறிவேன். க‌ட‌வுளுக்குக் கொடுப்ப‌து இன்னதென்றும் அறிவேன். என‌க்காக‌ நான் ஜீவிக்க‌ முடியாது என‌க்குள்ள‌தெல்லாம் நான் கொடுக்கும‌ட்டும் என் ஜீவிய‌த்தில் ஒரு ப‌ய‌னும் இல்லை என்னுடைய‌ ப‌ண‌த்தில் எவ்வ‌ள‌வு க‌ட‌வுளுக்குக் கொடுப்பேன் என்ப‌த‌ல்ல‌, க‌ட‌வுளுடைய‌ ப‌ண‌த்தில் எவ்வ‌ள‌வு என‌க்காக‌ வைத்துக்கொள்வேன் என்ப‌துதான் காரிய‌ம். "வாங்குகிற‌தைப் பார்க்கிலும் கொக்கிற‌தே பாக்கிய‌ம்" என்னும் ச‌த்திய‌த்தை நான் க‌ண்டுகொண்டேன். என் சிநேகித‌ர்க‌ளே, நீங்க‌ள் சுவிசேஷ‌ ஊழிய‌த்திற்காக‌ உங்க‌ள் செல்வ‌த்தைக் கொடுக்காவிடில் பெரிய‌ ஆசீர்வாத‌ங்க‌‌ளில் ஒன்றை இழ‌ந்து போகிறீர்க‌ள் என்ப‌து திண்ணம்.

வாக்குக் கொடுக்கிற‌ வ‌ழ‌க்க‌ம் ந‌ல்ல‌த‌ல்ல‌ என‌ச் சில‌ர் சொல்லுகிறார்க‌ள். ஏனெனில் உன் வ‌ல‌து கை செய்கிற‌தை உன் இட‌து கை அறியாதிருக்க‌க்க‌ட‌வ‌து என்று கூறியிருக்கிற‌த‌ல்ல‌வா என்பார்க‌ள். தாங்க‌ள் மிக‌வும் சொற்ப‌மாய்க் கொடுக்கிற‌ப‌டியால் த‌ங்க‌ள் வ‌ல‌து கை செய்த‌தை இட‌து கைக்குத் தெரிவிக்க‌க்கூடாது என்று எண்ணியே இவ்வாறு சொல்லுகிறார்க‌ள்.

அவ‌ர்க‌ளுக்குச் ச‌ம‌ப‌ங்கு அளிக்க‌ப்ப‌டும்

ஒரு குழ‌ந்தை கிண‌ற்றில் விழுந்து விட்ட‌து என்று வைத்துக்கொள்வோம். அதைக் காப்பாற்றும்ப‌டி ஒரு ம‌னித‌ன் கிண‌ற்றுக்குள் க‌யிற்றினால் இற‌க்கி விட‌ப்ப‌டுகிறான். அந்த‌ப் பிள்ளையை இர‌ட்சித்த‌த‌ற்காக‌ யாருக்கு வெகும‌தி கிடைக்கும்? கிண‌ற்றுக்குள் இற‌ங்கின‌வ‌னுக்கா? மேலேயிருந்து க‌யிற்றைப் பிடித்த‌வ‌னுக்கா? இர‌ண்டு பேருக்கும் வெகும‌தி கொடுக்க‌ப்ப‌டும் என்று க‌ட‌வுள் சொல்லுகிறார். இதைப்போல‌வே, நீ கீழே போக‌ முடியாத‌வ‌ன். நீ அந்நிய‌ நாட்டை ஒருபொழுதும் பார்க்க‌வில்லை. ஆனால் நீ க‌யிற்றைப் பிடிக்கிற‌வ‌னாயிருக்க‌லாம். நீ ஒரு ப‌தினாளை அனுப்ப‌க்கூடும். அவ்வாறு நீ செய்து உன் ப‌ண‌த்தை அவ‌னுக்காக‌க் கொடுத்தால் உன்னுடைய‌ வெகும‌தி, வெளிநாட்டுக்குப் போன‌ ம‌னித‌னுடைய‌ வெகும‌தியைப்போல‌வே இருக்கும்.

நெருப்பு அணைக்கும் வ‌ரிசையிலே ஒவ்வொருவ‌ரும் இருக்க‌வேண்டும். நீ கடைசி நுனியிலிருந்து த‌ண்ணீரை நெருப்பில் ஊற்றுகிற‌வ‌னானாலும், இடையில் நின்று த‌ண்ணீர் வாளியை வாங்கி அடுத்த‌வ‌னுக்குக் கொடுக்கிற‌வ‌னானாலும், கிண‌ற்றிலே த‌ண்ணீரை மொள்ளுகிற‌வ‌னானாலும் எல்லாரும் ஒன்றுதான். கேள்வி என்ன‌வெனில் அந்த‌ வ‌ரிசையில் நீ இருக்கிறாயா? நீ ஏதாவ‌து செய்து கொண்டிருக்கிறாயா? அல்ல‌து நீ வேடிக்கை பார்க்கிற‌வ‌னாய் ம‌ட்டும் இருக்கிறாயா? 'ஒவ்வொரு கிறிஸ்த‌வனும் ஒரு மிஷ‌னெரி' என்ப‌தே ந‌ம‌து குறுக்கோள்.

கொடுக்க‌க்கூடிய‌வ‌ர்க‌ள்:
த‌னி ஆளாக‌வும், அலுவ‌ல் செய்கிற‌வ‌ராக‌வும், போத‌க‌ராக‌வும், இருக்கலாம்